/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு செயல்முறை... பயிற்சி கொடுங்க ! பாதுகாப்பு உபகரணமின்றி அதிகரிக்கும் விபத்துகள்
/
பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு செயல்முறை... பயிற்சி கொடுங்க ! பாதுகாப்பு உபகரணமின்றி அதிகரிக்கும் விபத்துகள்
பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு செயல்முறை... பயிற்சி கொடுங்க ! பாதுகாப்பு உபகரணமின்றி அதிகரிக்கும் விபத்துகள்
பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு செயல்முறை... பயிற்சி கொடுங்க ! பாதுகாப்பு உபகரணமின்றி அதிகரிக்கும் விபத்துகள்
ADDED : டிச 26, 2025 05:56 AM

சிவகாசி, - பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் போதிய பயிற்சியும் இல்லாமல் வெடிபொருட்களை கையாளுவதால் வெடி விபத்துக்கள் அதிகரித்து வருவதால் ஆய்வுடன் சேர்த்து, தொழிலாளர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் விரும்புகின்றனர்.
மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர் சாத்துார் வெம்பக்கோட்டை பகுதிகளில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலைகளை கண்காணிக்க தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் தனி தாசில்தார், தொழிலக பாதுகாப்பு சுகாதார அமைப்பு, மத்திய பெட்ரோலியம் , வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (பெசோ) ஆகியவை உள்ளன.
கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், பட்டாசு உற்பத்தியாளர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக்குழு செயல்படுகிறது. இந்த அமைப்புகள் சார்பில் ஆலைகளில் சுழற்சி முறையில் ஆய்வு செய்து பாதுகாப்பு கட்டமைப்புகள், உபகரணங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
தொழிலக பாதுகாப்பு, சுகாதார அமைப்பு சார்பில் போர்மேன், மேலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. ஆனாலும் வெடி மருந்துகள் கையாளும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது, போதிய பயிற்சி இல்லாமல், அதிக அளவிலான தொழிலாளர்களை பணியில் அமர்துவதால் வெடிவிபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: பட்டாசு ஆலைகளில் வெடி மருந்து கலவை செய்தல், மருந்து செலுத்தும் அறை கான்கிரீட் கூரை உடன், அறையை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் உள்ள கோட்டை சுவர் அறைகளாக இருக்க வேண்டும். அந்த அறைகளில் இரு தொழிலாளர்களுக்கு மேல் இருக்கக் கூடாது.
மருந்து கலவை செய்யும் அறையில் இருந்து மருந்து செல்லும் அறைக்கு செல்ல நடைமேடை இருக்க வேண்டும். அறைகளில் கனமான ரப்பர் சீட்டுகள் இருக்க வேண்டும்.
வெடி மருந்துகள் கையாளும் தொழிலாளர்கள் கையுறை அணிய வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் பருத்தி நுால் ஆடைகளை அணிய கூடாது. நன்கு பயிற்சி பெற்ற தொழிளர்களை மட்டுமே வெடி மருந்துகளை கையாளும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளை முழுமையாக பின்பற்றினாலே 90 சதவீதம் விபத்துக்கள் தடுக்கப்படும். தொழிலக பாதுகாப்பு துறையின் பாதுகாப்பு பயிற்சி பட்டாசு ஆலை போர்மேன்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பயிற்சி வாய் மொழியாகவே அளிக்கப்படுகிறது. மாறாக அதிகாரிகள் பட்டாசு ஆலைகளுக்கு நேரில் சென்று வெடி பொருட்களை கையாளுதல், அதன் விளைவு தன்மை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க முன் வந்தால் விபத்து நடப்பது முழுமையாக தவிர்க்கப்படும்.
விபத்து ஏற்பட்டவுடன் ஆய்வு செய்து பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைப்பதற்கு பதில், உற்பத்தியாளர்கள் ,தொழிலாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, செயல்முறை பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

