/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆயிரம் மரக்கன்றுகள், 500 பனை விதைகள் சாதனை புரிந்து வரும் தன்னார்வலர்கள்
/
ஆயிரம் மரக்கன்றுகள், 500 பனை விதைகள் சாதனை புரிந்து வரும் தன்னார்வலர்கள்
ஆயிரம் மரக்கன்றுகள், 500 பனை விதைகள் சாதனை புரிந்து வரும் தன்னார்வலர்கள்
ஆயிரம் மரக்கன்றுகள், 500 பனை விதைகள் சாதனை புரிந்து வரும் தன்னார்வலர்கள்
ADDED : மார் 24, 2025 06:24 AM

கந்தக பூமியான சாத்துாரில் இயல்பாகவே வெயில் அதிகம். இதனால்தான் இந்த பகுதியில் தீப்பெட்டி, பேனா நிப் தொழில்கள் கடந்த காலங்களில் பெரும் வளர்ச்சி பெற்றன. இது போன்ற தொழில்கள் வளர்ச்சி பெற அப்பகுதியில் சீதோஷ்ண நிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
குறிப்பாக தீப்பெட்டி பட்டாசு தொழிலுக்கு சாத்துார் பகுதி மிகவும் சாதகமான பகுதியாகும். விவசாயம் போதுமான அளவில் நடைபெறாத காலகட்டங்களில் மக்களுக்கு இந்த தொழில்களே வாழ்வாதாரமாக இருந்தது என்றால் மிகை இல்லை.
வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்ததால் மக்கள் தங்கள் வீடுகளின் முன்பும் காலியாக உள்ள இடங்களிலும் மரங்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர். பசுமை இயக்கம், லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை இயக்கம், தடம் போன்ற அமைப்புகளும் மரம் வளர்ப்பில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்தது.
இதனால் நகரில் மெயின் ரோடு, பெரியார் நகர், சிதம்பரம் நகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு பகுதிகளில் தற்போது மரங்கள் வளர்ந்து முழுமையான சூழல் நிலவி வருகிறது. ஈஷாயோகா மைய இளைஞர்கள் ஒருங்கிணைந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சாத்துார் ரோடு ஓரங்களில் மரங்களை நட்டு வளர்த்து பராமரித்து சோலைவனமாக மாற்றி வருகின்றனர்.
வேப்பிலைப்பட்டி, நடுவப்பட்டி, ஜக்கம்மாள்புரம், வேண்டாங்குளம் கண்மாய் பகுதிகளில் இந்த அமைப்பினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை கரையில் நட்டுள்ளனர். இவை தற்போது முளையிட்டு வளர்ந்துள்ளன.
மேலும் வீடுகளில் தாங்களாகவே மரக்கன்று விதைகளை உருவாக்கி அவற்றை தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கியும் வருகின்றனர். மரம் வளர்ப்பில் ஆர்வமுடன் ஈடுபடும் இதுபோன்ற இளைஞர்களால் சாத்துார் மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராமங்களும் சோலைவனமாக மாறி வருகின்றன.
வாழும் காலத்தில் ஒவ்வொருவரும் நல்ல காரியங்கள் செய்து தங்கள் பெயரை மற்றவர்கள் ஞாபகத்தில் கொள்ளும்படி செய்ய வேண்டும் என முன்னோர் கூறுவர். நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஒரு மரமாவது நட்டு பராமரித்து வந்தாலே பெரிய புண்ணியம். எட்டூர்வட்டம் ரோடு ஓரத்திலும், நடுவப்பட்டி ரோடு ஓரத்திலும், காலியாக உள்ள ஊருணி கரையில் வரிசையாக மரங்களை நட்டு ஒரு ஆண்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து தற்போது அதை சோலைவனமாக மாற்றி உள்ளோம். அனைவரும் மரம் வளர்ப்போம்.
- எஸ்.கோபி, தன்னார்வலர், சாத்துார்.
பனை விதைகளை தயாரித்து பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களிடம் இலவசமாக வழங்கி பல்வேறு இடங்களில் நட்டு பராமரிக்கச் செய்துள்ளோம். வேண்டாங்குளம் கண்மாய் வேப்பிலைப்பட்டி கண்மாய் கரைகளில் 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டுள்ளோம். அவை தற்போது முளையிட்டு வளர்ந்து வருகிறது. உறுப்பினர்கள் ஒத்துழைப்பால் இதுபோன்ற நற்பணிகளை தொய்வின்றி செய்து வருகிறோம்.
- செந்தில்குமார், தன்னார்வலர், சாத்துார்.