/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெம்பக்கோட்டை அணையில் ஷட்டர் பழுதால் நீர்மட்டம் 10 அடிக்கும் கீழே குறைந்தது:... கவலையில் விவசாயிகள்
/
வெம்பக்கோட்டை அணையில் ஷட்டர் பழுதால் நீர்மட்டம் 10 அடிக்கும் கீழே குறைந்தது:... கவலையில் விவசாயிகள்
வெம்பக்கோட்டை அணையில் ஷட்டர் பழுதால் நீர்மட்டம் 10 அடிக்கும் கீழே குறைந்தது:... கவலையில் விவசாயிகள்
வெம்பக்கோட்டை அணையில் ஷட்டர் பழுதால் நீர்மட்டம் 10 அடிக்கும் கீழே குறைந்தது:... கவலையில் விவசாயிகள்
ADDED : ஆக 21, 2025 11:52 PM

சிவகாசி: வெம்பக்கோட்டை அணையில் ஷட்டர் பழுதால் தண்ணீர் வெளியேறி நீர்மட்டம் 10 அடிக்கும் கீழே குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே 1986 ல் அணை கட்டப்பட்டது. 23 அடி உயரம் கொண்ட அணையில் 5 மதகுகள் உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து காயல்குடி, சீவலப்பேரி உள்ளிட்ட கிளை ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகின்றது. வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, கரிசல்குளம். சல்வார் பட்டி, ஏழாயிரம் பண்ணை, விஜய கரிசல்குளம் உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3300 ஹெக்டேர் பாசன வசதி உடையது.
இதனை நம்பி நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடுகின்றனர். மேலும் அணையில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தவிர அணையை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடந்து வருகின்றது. கடந்த மழை சீசனில் அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் ஷட்டர் பழுதால் தற்போது தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. பிப். ல் அணையில் 20 அடி உயரம் வரை தண்ணீர் இருந்த நிலையில் ஷட்டர் பழுதால் தண்ணீர் வெளியேறி ஜூனில் 15 அடியாக குறைந்தது. தற்போது ஷட்டர் பழுதால் தொடர்ந்து தண்ணீர் வெளியேறிய நிலையில் நீர்மட்டம் 9.5 அடி தான் உள்ளது. கடந்த காலங்களிலும் இதே போன்று மதகில் ஷட்டர் பழுதால் தண்ணீரை தேக்க வழியின்றி வீணாக வெளியேறிவிடும்.
இதனை தற்காலிகமாக சரி செய்வர். இதுவரையும் ஷட்டரை நிரந்தரமாக சரி செய்யவில்லை. எனவே சேதம் அடைந்த ஷட்டரை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகள் கூறுகையில், அணையில் தண்ணீர் முழுமையாக வற்றிய பின்னரே சேதமடைந்த ஷட்டரை சரி செய்ய முடியும், என்றனர்.

