/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீர் தட்டுப்பாடு, வாறுகாலில் குடிநீர் பகிர்மான குழாய்
/
குடிநீர் தட்டுப்பாடு, வாறுகாலில் குடிநீர் பகிர்மான குழாய்
குடிநீர் தட்டுப்பாடு, வாறுகாலில் குடிநீர் பகிர்மான குழாய்
குடிநீர் தட்டுப்பாடு, வாறுகாலில் குடிநீர் பகிர்மான குழாய்
ADDED : செப் 09, 2025 03:32 AM
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை அருகே ஆமணக்குநத்தம் ஊராட்சியில் குடிநீருக்காக மக்கள் அலைவதுடன், குடிநீர் பகிர்மான குழாய் வாறுகால் வழியாக வருவதால் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது ஆமணக்கு நத்தம் ஊராட்சி . இதற்குட்பட்டு சந்தையூர், ஆ.கல்லுப்பட்டி, ஆமணக்கு நத்தம் உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. ஆமணக்கு நத்தத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. கண்மாயில் போர்வெல் அமைத்து மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. போதுமான குடிநீர் இருந்தும் முறையான சப்ளை இல்லாததாலும், மேடான பகுதிகளுக்கு குடிநீர் வராததாலும் பெண்கள் குடத்துடன் அலைகின்ற நிலை ஏற்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீர் பிடிப்பதற்குள் ஒரு மணி நேரத்திற்குள்ளே நின்று விடுவதாகவும் புலம்புகின்றனர்.
ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட பகிர்மான குழாய்கள் வாறுகாலின் வழியாக வருவதால், வாறுகாலை துப்புரவு செய்ய முடியாமலும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா என்று கேள்வியும் எழுகிறது.
மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் வரும் ரோடு அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் ரோட்டின் பல பகுதிகள் குண்டும், குழியுமாக இருப்பதால் மக்கள் நடக்க முடியாமலும் டூவீலர்களில் செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
பல தெருக்களில் பேவர் பிளாக் ரோடு அமைக்க வேண்டும் வாறுகால்களில் கழிவு நீர் ஆங்காங்கு தேங்கி கிடக்கிறது. இந்திரா காலனி செல்லும் மெயின் ரோட்டின் இருபுறமும் புதியதாக வாறுகால் அமைத்தும் பயன் இல்லை. முறையற்ற பணியால் கழிவுநீர் தேங்கி மழைக்காலங்களில், கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். தேங்கி கிடக்கும் தண்ணீரில் புழுக்கள் உற்பத்தியாகி வீட்டிற்குள் புகுந்து விடுவதாக பெண்கள் புலம்புகின்றனர்.
குருந்தமடம் ரோடு பகுதியில் உள்ள தெருக்களில் குடிநீர் வராமல் மக்கள் அவதிப்படுகின்றனர். போதுமான மினி பவர் தொட்டிகள் இல்லை. ஆமணக்குநத்தம் - கல்லுப்பட்டி செல்லும் 1 கி.மீ., வரையுள்ள ரோடு குறுகியதாக இருப்பதால் கனரக வாகனங்கள் எதிரே வரும்போது வழிவிட முடியாமல் பிற வாகனங்கள் திணறுகின்றன.
இந்த ரோட்டில் தினமும் 50-க்கும் மேற்பட்ட கல்குவாரி லாரிகள் வந்து செல்வதால் ரோடுகள் மேலும் சேதம் அடைவதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த ரோட்டை அகலப்படுத்த ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தையூரில் தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் மற்றும் வாறுகால் வசதி செய்து தர வேண்டும். ஆமணக்கு நத்தம் நூலகம் உட்பகுதியில் கூரையின் காரை பகுதியில் பெயர்ந்து அடிக்கடி விழுகிறது. நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
ரோடு வேண்டும் நல்லையன், விவசாயி: மெயின் ரோட்டில் இருந்து ஆமணக்கு நத்தம் ஊருக்குள் செல்லும் ரோடு அமைத்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பல இடங்களில் ரோடு சேதம் அடைந்து விட்டதால் மக்கள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர் டூவீலர்களில் செல்ல முடியவில்லை. இங்கு புதியதாக ரோடு அமைக்க வேண்டும்.
சுகாதாரக்கேடு மாரீஸ்வரி, குடும்பதலைவி: ஆமணக்கு நத்தம் இந்திரா நகர் செல்லும் ரோட்டின் இருபுறமும் அமைக்கப்பட்ட வாறுகாலில் கழிவுநீர் தேங்கி வெளியேற முடியாமல் சுகாதார கேடாக உள்ளது. மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
வாறுகாலை நாங்கள்தான் சுத்தம் செய்ய வேண்டி உள்ளது. எங்கள் பகுதியில் புதியதாக ரோடும், கழிவுநீர் வெளியேறும் வகையில் அகல மான வாறுகாலும் அமைத்து தர வேண்டும்.
குடிநீர் பிரச்னை மாரியம்மாள், குடும்ப தலைவி: ஆமணக்குநத்தத்தில் மேடான பகுதிகளுக்கு குடிநீர் வருவது இல்லை. குடிநீருக்குத் தட்டுப்பாடு இல்லை என்றாலும் முறையான விநியோகம் இல்லாததால் மக்கள் குடிநீருக்காக அலைய வேண்டிய உள்ளது. புழக்கத்திற்கு மினி பவர் பம்ப் தொட்டி அமைக்க ஊராட்சி நட வடிக்கை எடுக்க வேண்டும்.