/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிக்னல் பிரச்னைக்கு எப்போது விடியல்
/
சிக்னல் பிரச்னைக்கு எப்போது விடியல்
ADDED : மார் 03, 2026 05:28 AM

விருதுநகர்: விருதுநகர் எம்.ஜி.ஆர்.,சிலை, மதுரை ரோடு பகுதியில் அமைந்துள்ள சிக்னல்கள் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் சீறிப் பாய்வதோடு விபத்தையும் ஏற்படுத்து கின்றனர்.
விருதுநகர் கருமாதி மடம் எம்.ஜி.ஆர்.,சிலை அமைந்துள்ள பகுதியில் நான்கு புறங்களில் இருந்து ரோடுகள் சந்திக்கின்றன. விருதுநகரில் இருந்து கலெக்டர் அலுவலகம், சிவகாசி ரோட்டில் இருந்து அருப்புக்கோட்டை பாலம் ஆகிய ரோடுகளில் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதை கருத்தில் கொண்டு நான்கு ரோடுகளின் சந்திப்பிலும் சிக்னல் செயல்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால் நான்கு திசைகளில் வரும் வாகனங்களும் ஒருவரை ஒருவர் முந்தி செல்வதால் குறுக்கும் நெடுக்குமாக பாய்கின்றன.
இந்த நெரிசலில் முதியவர்கள், பெண்கள் சிக்கினால் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே போல மதுரை ரோடு பகுதிகளில் எப்போதும் எரியும் சிவப்பு, மஞ்சள் நிற சிக்னல்கள் ஒரு எச்சரிக்கை ஏற்படுத்தும் அமைப்பாக இருந்தன.
இவையும் பல ஆண்டுகளாக செயல்படாமல் தான் உள்ளன. புதிய சிக்னல்களை நிறுவி போக்குவரத்து நெரிசலையும், விதிமீறல்களை கட்டுப்படுத்தி விபத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

