கணவர் கொடுமை தாங்காததால் தந்தையுடன் செல்ல பெண் விருப்பம் : கோர்ட் உத்தரவு என்ன?
கணவர் கொடுமை தாங்காததால் தந்தையுடன் செல்ல பெண் விருப்பம் : கோர்ட் உத்தரவு என்ன?
ADDED : ஜூலை 28, 2011 01:03 AM
சென்னை : மேற்குவங்கத்தில், விமானப் படை அதிகாரியாக பணியாற்றுபவரின் மனைவி, ஐகோர்ட்டில் நேற்று ஆஜரானார்.
தந்தையுடன் இருக்க விருப்பம் தெரிவித்ததால், 'ஹேபியஸ் கார்ப்பஸ்' மனு வாபஸ் பெறப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ஆங்கில பத்திரிகை நிருபர் செல்வராஜ் தாக்கல் செய்த, 'ஹேபியஸ் கார்ப்பஸ்' மனு: மாதவரத்தில் வசிக்கும் மணிஷா மிஸ்ரா என்பவர், எனது மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவருக்கு இரண்டு குழந்தைகள். விருப்பமின்றி பெற்றோர் வீட்டில் இருப்பதாகவும், கணவர் மோசமாக நடத்துவதாகவும் தெரிவித்தார். வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதித்தால், போலீஸ் அல்லது கோர்ட்டை அணுகுவார் என பயந்து, வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
அவரது கணவர் சுனில்குமார், மேற்குவங்கத்தில் விமானப்படை அதிகாரியாக பணியாற்றுகிறார். மணிஷா மிஸ்ராவின் குடும்பத்தினர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். சென்னையில் வசித்து வருகின்றனர். மணிஷாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், செக்ஸ் ரீதியாகவும் அவரது கணவர் தொந்தரவு செய்தார். விவாகரத்து வேண்டும் என கேட்ட போது தாக்கினார். கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
சிகிச்சைக்காக மணிஷாவை அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் கூறினார். அண்ணா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என, தந்தையிடம் அவர் கூறினார். அதிலிருந்து யாரிடமும் பேசவோ, சந்திக்கவோ அவரை அனுமதிப்பதில்லை.
கணவருடன் மணிஷாவை அனுப்புவதற்கு பெற்றோர் ஏற்பாடு செய்கின்றனர். மணிஷாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. நீதிபதிகள் முன் மணிஷா ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். பெற்றோருடன் இருப்பதாகவும், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்றும் மணிஷா கூறினார்.
இதையடுத்து, மனுதாரரான செல்வராஜ், 'தந்தை அளித்த உறுதிமொழியின் மீது மணிஷாவுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, இம்மனுவை வாபஸ் பெற அனுமதியளிக்க வேண்டும்' என மனு தாக்கல் செய்தார். இதை பதிவு செய்து கொண்ட 'டிவிஷன் பெஞ்ச்', மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

