ஐ.ஜி., சிவனாண்டி தூண்டுதல்படி போலீஸ் நடவடிக்கை எடுக்க மறுப்பு: ஐகோர்ட் கிளை மனுவில் தகவல்
ஐ.ஜி., சிவனாண்டி தூண்டுதல்படி போலீஸ் நடவடிக்கை எடுக்க மறுப்பு: ஐகோர்ட் கிளை மனுவில் தகவல்
ADDED : செப் 06, 2011 10:39 PM
மதுரை: ''கொடைக்கானல் நிலம் அபகரிப்பு குறித்து கொடுக்கப்பட்ட புகாரை, ஐ.ஜி., சிவனாண்டி தூண்டுதல் பேரில் போலீசார், ஏற்கனவே விசாரிக்க மறுத்து விட்டனர்,'' என, மதுரை ஐகோர்ட் கிளையில் ஜான்ரோஷர் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிட்டார்.
கொடைக்கானலை சேர்ந்த ஜான்ரோஷர், தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் 98 சென்ட் நிலத்தை சிலர் அபகரித்ததாக புகார் கொடுத்தார்.
அதன்படி முன்னாள் நகராட்சி தலைவர் குரியன் ஆபிரகாம், தற்போதைய தலைவர் முகமது இப்ராகிம், உத்தம்சந்த் கலாடா, பழனிச்சாமி உட்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கை ரத்து செய்ய கோரி உத்தம் சந்த் கலாடா, பழனிச்சாமி ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். இம்மனுவுக்கு ஜான் ரோஷர் சார்பில் வக்கீல்கள் அஜ்மல்கான், காந்தி பதில் மனு செய்தனர். மனுவில் ஜான் ரோஷர் கூறியதாவது: உத்தம்சந்த் கலாடா, பழனிச்சாமி அரசியல் மற்றும் போலீஸ் துறையில் செல்வாக்கு மிக்கவர்கள். அதை பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக
என் தந்தை சேவியர் மைக்கேலுக்கு சொந்தமான நிலத்திலிருந்து என்னை வெளியேற்றினர். ஐ.ஜி., சிவனாண்டியும், என் தந்தையும் நண்பர்கள். இதுகுறித்து தந்தை ஐ.ஜி.யை அணுகினார். ஐ.ஜி., எங்களுக்கு உதவாமல், பழனிச்சாமியை சந்திக்கும்படி தெரிவித்தார். இதனால் தந்தை டி.ஜி.பி.,யிடம் புகார் கொடுத்தார். புகாரை விசாரிக்க டி.ஜி.பி.,யிடம் திண்டுக்கல் எஸ்.பி., டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் விசாரிக்கவில்லை. ஐ.ஜி., தூண்டுதல்பேரில், பொய் புகார் என ஏற்கனவே போலீசார், முடித்து விட்டனர். மேலும் நிலத்திற்காக எந்த பணமும் பெறவில்லை. எனவே என் புகாரில் பதிவான வழக்கை ரத்து செய்ய கூடாது, என கோரினார். இம்மனுக்கள் மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதி ஆர்.மாலா தள்ளிவைத்தார்.