வெளி மாநில கால்நடைகளுக்கு திடீர் தடை:பறவை காய்ச்சல் தடுக்க அதிரடி நடவடிக்கை
வெளி மாநில கால்நடைகளுக்கு திடீர் தடை:பறவை காய்ச்சல் தடுக்க அதிரடி நடவடிக்கை
ADDED : செப் 25, 2011 05:32 AM
ஓசூர்: தமிழக எல்லையில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து சரக்கு வாகனங்களிலும், பறவை காய்ச்சலை தடுக்க, கால்நடைத் துறையினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு மருந்து அடிக்கின்றனர்.
கோழி, பறவைகளை ஏற்றி வரும் வாகனங்கள், தமிழகத்துக்கு வர, கால்நடை துறையினர் திடீர் தடை விதித்துள்ளனர்.
அஸ்ஸாம், மேற்கு வங்கம் மாநிலங்களில், சில நாட்களாக பறவை காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில் ஈரோட்டை சேர்ந்த ஒருவர், கோவை தனியார் மருத்துவமனையில், இரு நாளுக்கு முன் பறவை காய்ச்சலுக்கு பலியாகினர்.வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும், கால்நடை தீவனம் ஏற்றி வரும் வாகனங்கள் மூலம், பறவை காய்ச்சல் பாதிப்பு பரவுவதாக, தமிழக கால்நடை பராமரிப்புதுறை இயக்குனரகத்துக்கு தகவல் சென்றது.
இதையடுத்து, கால்நடை பராமரிப்பு துறை செயலர் ககன் தீப்சிங் பேடி உத்தரவின் பேரில், அனைத்து எல்லையோர மாவட்டங்களிலும் வெளிமாநிலங்களில் இருந்து, கால்நடை தீவனம் ஏற்றி வரும் சரக்கு லாரிகள் மூலம் பரவும் பறவை காய்ச்சலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவை காய்ச்சல் தடுப்பு மருந்து அடிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் அருகே ஜுஜுவாடியில் கர்நாடக மாநிலம் வழியாக, வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும், கால்நடைதுறை பராமரிப்பு துறையினர் கண்காணித்து, பறவை காய்ச்சல் தடுப்பு மருந்து அடித்து வருகின்றனர்.
கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ஞானஉபகாரம் உத்தரவின் பேரில், மாவட்ட கால்நடை நோய் புலனாய்வுதுறை டாக்டர் கந்தசாமி, உதவி இயக்குனர் இளவரசன் மற்றும் கால்நடைத்துறை ஊழியர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த அனைத்து சரக்கு லாரிகள், பயணிகள் வாகனங்களின் டயர்கள், பொருட்கள் மீது பறவை காய்ச்சல் தடுப்பு மருந்து அடித்தனர்.
பறவைகள், கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களை, கால்நடை துறை அதிகாரிகள் கண்காணித்து, அவற்றை தமிழக எல்லைக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்புகின்றனர்.
இதனால், பறவைகள், கோழிகளை ஏற்றி வந்த ஏராளமான வாகன ஓட்டிகள், நேற்று தமிழகத்திற்குள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல், கடும் அவதியடைந்து வாகனங்களை திருப்பி சென்றனர்.

