முன்னாள் அமைச்சரின் ஊழல் குறித்த கையேடு திருச்சி முழுவதும் அ.தி.மு.க., வினியோகம்
முன்னாள் அமைச்சரின் ஊழல் குறித்த கையேடு திருச்சி முழுவதும் அ.தி.மு.க., வினியோகம்
ADDED : அக் 06, 2011 09:56 PM
திருச்சி : தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த நேருவும், அவரது குடும்பத்தாரும் செய்த ஊழல்கள் குறித்த விவரங்களை, கையேடாக அச்சிட்டு, அ.தி.மு.க.,வினர் பிரசாரம் செய்து வருவது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ.,வும், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருந்த மரியம்பிச்சை, சாலை விபத்தில் இறந்ததால், காலியாக உள்ள மேற்கு தொகுதிக்கு, வரும் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது.
அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பரஞ்ஜோதியும், தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் நேருவும் போட்டியிடுகின்றனர்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க., வினருடன் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜியால் தயாரிக்கப்பட்ட, நான்கு பக்கம் அடங்கிய கையேடு, வாக்காளர்களிடம் வினியோகிக்கப்படுகிறது. அதில், அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதிக்கு ஓட்டு கேட்டும், தி.மு.க., வேட்பாளர் நேரு, கடந்த ஆட்சியில் செய்த ஊழல் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி பக்கத்தில், அரசு போக்குவரத்துக் கழக பணத்தை நேரு அள்ளிச் செல்வது போலவும், பின், சிறையில் இருப்பது போலவும் சித்தரித்து கார்ட்டூன் அச்சிடப்பட்டுள்ளது. 'வேலியே பயிரை மேய்ந்தது' என்ற தலைப்பில், தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த நேரு செய்த ஊழல்கள், கண்டக்டர், டிரைவர் பணிகளில் ஆட்களை நியமித்தது மூலம், 579 கோடி ரூபாய் சம்பாதித்தது, நேரு, சுயலாபத்துக்காக போக்குவரத்துக் கழகத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியது ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

