பணிபுரியும் கிராமங்களிலேயே வி.ஏ.ஓ.,க்கள் தங்க வேண்டும் : கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
பணிபுரியும் கிராமங்களிலேயே வி.ஏ.ஓ.,க்கள் தங்க வேண்டும் : கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
ADDED : ஆக 04, 2011 02:00 AM

தூத்துக்குடி : ''தாங்கள் பணிபுரியும் கிராமங்களிலேயே வி.ஏ.ஓ.,க்கள் தங்கவேண்டுமென'' புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.,வலியுறுத்தினார்.
தூத்துக்குடியில் நேற்று அவர் கூறியதாவது: கடந்த தி.மு.க., ஆட்சியில் பொதுமக்கள் நிலத்தை அபகரித்த அக்கட்சியினர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜெ., அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதுபோல, பெரிய தனியார் நிறுவனங்கள் ஆக்ரமித்துள்ள நிலங்களையும் மீட்பதில், நிலமீட்பு போலீசார் தனிக்கவனம் செலுத்தவேண்டும்.
இதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, இதில் அரசியல் பழிவாங்கல் உள்ளதாக கூறுவது, நிலஅபகரிப்பை ஊக்குவிப்பதாக உள்ளது. ஏனெனில், நில அபகரிப்பு, வாழ்வுரிமை பறிப்பிற்குச் சமம். கடந்த இரண்டரை மாத ஜெ., அரசு நல்லாட்சி தருவதற்காக சரியான திசையில் செல்கிறது. ஆனால், அரசின் வேகத்திற்கு ஈடுகொடுத்து அதிகாரிகள் செயல்படவில்லை. இதனால், பொதுமக்களுக்கான நலத்திட்ட அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாகவே உள்ளன. அரசு துறைகளில் ஆள்பற்றாக்குறையும் இதற்கு காரணம். அரசின் பல்வேறு உதவித்தொகைகள், நலத்திட்டங்களை பொதுமக்கள் பெற ஏதுவாக அவர்களுக்கு காலதாமதமின்றி சான்றிதழ் வழங்குவதற்காக வி.ஏ.ஓ.,க்கள், தாங்கள்
பணிபுரியும் கிராமங்களிலேயே தங்க வேண்டும். இதற்காக பொதுமக்களை வீணாக அலைய வைக்கக்கூடாது. இதற்கு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலம், நிலத்தடி நீர்பாதுகாப்பு மற்றும் காற்று மாசுபடுதலை தடுக்கவலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி, பிறந்தமண் அறக்கட்டளை சார்பில் ஆக.,15ல் மாவட்ட தலைநகரம், ஒன்றிய அளவில் விழிப்புணர்வு பிரசார பேரணி நடக்கிறது. ஒட்டப்பிடாரத்தில் நான் கலந்துகொள்கிறேன், என்றார்.

