பழநியில் காணிக்கை மாடு வாங்க மறுப்பு:காத்திருந்து சாதித்த பக்தர்
பழநியில் காணிக்கை மாடு வாங்க மறுப்பு:காத்திருந்து சாதித்த பக்தர்
ADDED : ஆக 22, 2011 11:02 PM

பழநி:பழநி கோயிலில் பக்தர் ஒருவர் கொண்டு வந்த காணிக்கை மாட்டை வாங்க மறுத்தனர். அதை விற்று பணமாக கொண்டு வருமாறு கூறினர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு, நேர்த்திக்கடனாக பசு, காளை மாடுகள் விடப்படுவது வழக்கம். இவற்றை பராமரிக்க, கள்ளிமந்தையத்தில் கோசாலை உள்ளது.
ஆனால் கோயில் ஊழியர்கள் சிலர், காணிக்கை மாடுகளை ஏற்பதில்லை எனவும், விற்று பணமாக செலுத்தும்படியும் வற்புறுத்துகின்றனர். இதை பயன்படுத்தி, வாங்கி செல்வதற்காக, சிலர் கோயிலில் உலவுகின்றனர். நேற்று, நாமக்கல் நரலூரை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி, காளைக்கன்றை காணிக்கையாக செலுத்த வந்தார். தேவஸ்தான ஊழியர்கள், மாட்டைப் பெற மறுத்தனர்.
இதையடுத்து யானைப்பாதை வழி, மலைக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் காளைக்கன்று அடிவாரத்திற்கு அழைத்து செல்லப்பட்டது. இடைத்தரகர்கள் இதை விலை பேசிய போது, பழனிச்சாமி விற்க மறுத்தார். மாலை 6 மணி வரை, பாதவிநாயகர் கோயில் அருகே உறவினர் 60 பேருடன் காத்திருந்தார்.இதுகுறித்து கோயில் இணை கமிஷனர் ராஜாவிடம் கேட்ட போது, ''மதிய உணவின் போது வந்ததால், காத்திருக்கும்படி ஊழியர்கள் கூறினர். மாட்டை வாங்க மறுக்கவில்லை,'' என்றார். அவரது கவனத்துக்கு சென்ற பின், பழனிச்சாமியை அழைத்து வந்த ஊழியர்கள், காளைக்கன்றை பெற்று கொண்டனர்.