ADDED : அக் 06, 2011 09:45 PM
சேலம் : சேலம் அருகே, அடுத்தடுத்து நில மோசடியில் ஈடுபட்ட, கொங்கணாபுரம் ஒன்றிய தி.மு.க., செயலர், நேற்று, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றிய தி.மு.க., செயலர் பரமசிவம். ஒன்றியக்குழு தலைவராகவும் பதவி வகிக்கும் இவர், மோலபாடி கச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவருக்கு சொந்தமான, 28 சென்ட் நிலத்தை, செல்லம்மாள் என்பவர் உதவியுடன், போலி ஆவணங்களை தயார் செய்து அபகரித்து கொண்டார்.
அதபோல, சடையன் என்பவருக்கு சொந்தமான, 4.58 ஏக்கர் நிலத்தை அபகரிக்க, அவரை கடத்திச் சென்று, போலி ஆவணத்தை தயார் செய்து, தன் பெயரில் கிரயம் செய்து கொண்டார். ஓமலூர் மெயின்ரோடு, கன்னந்தேரியைச் சேர்ந்த வணங்காமுடிக்கு சொந்தமான, 2,400 சதுரஅடி நிலத்தையும் மிரட்டி, பரமசிவம், தனக்கு சொந்தமாக்கி கொண்டார்.
இது தொடர்பாக, சேலம் நில அபகரிப்பு மீட்டுக்குழு போலீசார் வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர். அடுத்தடுத்து நிலஅபகரிப்பு வழக்கில் சிக்கிய அவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., பாஸ்கரன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, சங்ககிரி ஆர்.டி.ஓ., சிவராசு விசாரணை நடத்தி, பரமசிவத்தை குண்டர் சட்டத்தில் அடைக்க, அறிக்கை வழங்கினார். அதன்பேரில், பரமசிவத்தை குண்டர் சட்டத்தில் அடைக்க, கலெக்டர் மகரபூஷணம் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, குண்டர் சட்டத்தில், பரமசிவம் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

