தொலைபேசி இணைப்பு முறைகேடு:பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் அறிக்கை தாக்கல்
தொலைபேசி இணைப்பு முறைகேடு:பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் அறிக்கை தாக்கல்
ADDED : அக் 11, 2011 11:22 PM
சென்னை:பி.எஸ்.என்.எல்., தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய விவகாரத்தில், சென்னை தொலைபேசியைச் சேர்ந்த அதிகாரிகள், சி.பி.ஐ.,யிடம் விவரங்களை வழங்கியுள்ளதாக தெரிகிறது.ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனமான மேக்சிசுக்கு விற்க நிர்பந்தித்தது, மலேசியாவின் அஸ்ட்ரோ நிறுவனம், சன் 'டிவி'யில், பல கோடி ரூபாய் முதலீடு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கலாநிதி, தயாநிதியின் சென்னை மற்றும் டில்லியில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன் தினம் அதிரடி சோதனை நடத்தினர்.சோதனையில், அடையாறு போட் கிளப் வீட்டிற்கு வழங்கப்பட்ட, 323 பி.எஸ்.என்.எல்., தொலைபேசி இணைப்புகளை, அதிகாரத்தின் மூலம் சன் 'டிவி' நிறுவனத்துக்கு கொடுத்து, பி.எஸ்.என்.எல்.,க்கு இழப்பு ஏற்படுத்தியது குறித்தும், அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இணைப்புக்கு யார் அனுமதி வழங்கியது, இதற்கு பயன்படுத்திய, 'ஆப்டிக்கல்' கேபிளின் நீளம் மற்றும் மதிப்பு, இதற்கு முன் இதுபோன்று இவ்வளவு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆவணங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் சென்னை தொலைபேசி நிறுவன அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப் பெற்றதாக தெரிகிறது.சென்னை தொலைபேசி சார்பில், என்ன ஆவணங்கள், தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான விவரங்களை அளிக்க சென்னை தொலைபேசி அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

