ஓட்டல் உரிமையாளர் மகன் கடத்தல்:வழக்கில் வாட்ச்மேன் கைது:"வாக்கிடாக்கியால்' தலைமறைவான 5 பேர்
ஓட்டல் உரிமையாளர் மகன் கடத்தல்:வழக்கில் வாட்ச்மேன் கைது:"வாக்கிடாக்கியால்' தலைமறைவான 5 பேர்
ADDED : அக் 11, 2011 11:09 PM
மதுரை:மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே ஸ்ரீநிதி ஓட்டல் விடுதி உரிமையாளர் சுப்புராம் மகன் மணிகண்டன்,18, கடத்தல் வழக்கில், விடுதி வாட்ச்மேன் மூர்த்தி கைது செய்யப்பட்டார். வாக்கி டாக்கி' உதவியால் தலைமறைவான 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.அக்.,10ல் இரவு ஓட்டல் வரவேற்பறையில் இருந்து மணிகண்டன் ரூ.30 ஆயிரத்துடன் காரில் ஏறியபோது 5 பேர் கடத்திச் சென்றனர். பின், பணம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துக் கொண்டு, ரிங் ரோட்டில் இறக்கிவிட்டு சென்றனர். இவ்வழக்கில், விடுதி வாட்ச்மேன் மூர்த்தியை புதூர் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவனியாபுரத்தைச் சேர்ந்த பாண்டி மற்றும் ஆண்டி, செந்தில், அழகு உட்பட 5 பேர் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. மணிகண்டனை கடத்துவதற்கு உதவுமாறு மூர்த்தியை சந்தித்த பாண்டி, கூலியாக ரூ.500 கொடுத்துள்ளார். சம்பவத்தன்று, மணிகண்டன் வெளியே வரும்போது, லைட்டை அணைத்து கடத்திச் செல்ல மூர்த்தி உதவினார். இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதை அடிப்படையாக கொண்டு மூர்த்தி கைது செய்யப்பட்டார்.
இவரிடம் போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோது, மொபைல் போனில் பாண்டி பேசினார். அப்போது போலீஸ் வாக்கிடாக்கி ஒலித்ததால், சுதாரித்துக் கொண்ட பாண்டி, மணிகண்டனை ரிங் ரோட்டில் இறக்கிவிட்டு, பஸ்சில் செல்லுமாறு ரூ.100 கொடுத்துள்ளார். பின், ஓட்டலுக்கு வந்த மணிகண்டன் போலீசாரிடம் கூறுகையில், ''என்னை விமானம் நிலையம் அருகே கடத்திச் சென்றனர். அங்கிருந்து வேறு ஒரு காரில் அழைத்துச் சென்றனர். கண்ணில் கருப்பு துணி கட்டியிருந்ததால் எந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர் என தெரியவில்லை,'' என்றார். இதற்கிடையே மணிகண்டனின் கார், அரசு ஆஸ்பத்திரியில் கண்டெடுக்கப்பட்டது. கடத்தல்காரர்களின் உறவினர்களிடம் விசாரணை நடக்கிறது.

