ADDED : ஆக 05, 2011 08:21 PM
உடுமலை: காகித ஆலையை மிரட்டி எழுதி வாங்கிய வழக்கில், சன் பிக்சர்ஸ் நிர்வாக அதிகாரி சக்சேனா மற்றும் அவரது உதவியாளர் ஐயப்பன் ஆகியோர் உடுமலை கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு கோவையையடுத்த கருமத்தம்பட்டியில் காகித ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையை, திருவல்லிக்கேணி தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன், சன் பிக்சர்ஸ் நிர்வாக அதிகாரி சக்சேனா, அவரது உதவியாளர் ஐயப்பன் உள்ளிட்ட 8 பேர், சீனிவாசனிடமிருந்து மிரட்டி எழுதி வாங்கினர். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், அன்பழகன் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, சக்சேனா மற்றும் அவரது உதவியாளர் ஐயப்பன் ஆகியோர் உடுமலை ஜே.எம். 1 கோர்ட்டில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் கோர்ட் காவலில் வைத்து விசாரிக்க, நீதிபதி தீபா உத்தரவிட்டார்.