மலை மாவட்டத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள்: நடவடிக்கையை முடுக்கி விட்டால் நிம்மதி
மலை மாவட்டத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள்: நடவடிக்கையை முடுக்கி விட்டால் நிம்மதி
ADDED : செப் 17, 2011 11:12 PM
ஊட்டி: நீலமலையின் தலைநகரமான ஊட்டியில், குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது, உள்ளூர் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள சுற்றுலா மையங்களில், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகியவை, குளிர் வாசஸ்தலங்களாக கருதப்படுகின்றன.
சுற்றுலா மையங்களுக்கு, ஆண்டுதோறும் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்வதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலாவை மேம்படுத்த, மாநில சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்தாலும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ளது போல், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தூய்மையான சூழல், இங்கு குறைவாக உள்ளது என்பது, முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. இதுகுறித்த புகார் மனுக்கள், ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இருந்து, கடந்த ஆட்சியின் போதே, மாநில சுற்றுலா துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், சுற்றுலாத் துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் இன்றியும், முறையான அனுமதி இன்றியும் நடந்து வரும் காட்டேஜ்கள் குறித்து, 'சர்வே' நடத்த வேண்டும்; குடியிருப்பு பெயரில் வரிகளை செலுத்தி நடத்தப்படும் விடுதிகளில், குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட, பல விதிமுறைகள் இடம் பெற்றிருந்தன.
விதிமுறை காற்றில் விடப்பட்டதால், ஊட்டியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், ஓய்வு விடுதிகள், சீசன் காலங்களில் சுற்றுலா விடுதிகளாக மாற்றப்படுகின்றன. இத்தகைய காட்டேஜ்களில், சுற்றுலாப் பயணிகள் வருகை குறித்த உண்மையான விவரங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. இதுபோன்ற காரணங்களால், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக உள்ள மலை மாவட்டத்தின் தலைநகரம் மெல்ல, மெல்ல குற்றச் செயல்களை அரங்கேற்றும், 'கொலை நகரமாக' மாறி வருகிறது. இதற்கு, ஊட்டி மேரிஸ் ஹில் பகுதியில், அனுமதியில்லாத காட்டேஜில், சமீபத்தில் நடந்த, 'இரட்டை கொலை' சம்பவம் முக்கிய உதாரணம். மறைமுக காட்டேஜ்களுக்கு, 'கடிவாளம்' போட, மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், பல்வேறு குற்றங்கள் அரங்கேறும் பகுதியாக, ஊட்டி மாறுவது நிச்சயம்.