ADDED : செப் 22, 2011 01:38 AM
சென்னை:சிகிச்சைக்காக சென்னை வந்த இலங்கை மூதாட்டி, மாயமானார்.
தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.கொழும்பில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற, இந்திராணி, 70, தன்னுடன் வேலை பார்த்த விஜயலட்சுமிக்கு, 70, கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக, இருவரும் கடந்த, 3ம் தேதி சென்னை வந்தனர்.இவர்கள், தி.நகர் கிரி ரோட்டில் உள்ள பெங்கால் அசோசியேஷனில் தங்கி இருந்தனர். கடந்த, 7ம் தேதி, சங்கர நேத்ராலயா மருத்துவமனையில், கண் பரிசோதனை செய்துவிட்டு, தி.நகரில் உள்ள அறைக்கு திரும்பினர். மதியம் 2 மணி அளவில், வெளியே சென்ற விஜயலட்சுமி, திரும்பி வரவில்லை.
இது குறித்து, அவருடன் தங்கியிருந்த இந்திராணி, தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார், தனிப்படை அமைத்து, இலங்கை மூதாட்டியை தேடி வருகின்றனர்.தி.நகரில் உள்ள பெங்கால் அசோசியேஷனில், முதலில் அறை வாடகைக்கு எடுத்த போது, கழிவறை வசதியுடன் கூடிய அறை தரப்பட்டது. ஆனால், மருத்துவமனைக்கு சென்று திரும்பி வந்த போது, கழிவறை அறை இல்லாத வேறு அறை ஒதுக்கப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி, கோபித்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். அப்படி சென்றவர் தான் திரும்பி வரவில்லை என, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.