அரசு பள்ளி மாணவியருக்கு இலவச "சானிடெரி நாப்கின்' : துணை சுகாதார மையத்தில் வினியோகம்
அரசு பள்ளி மாணவியருக்கு இலவச "சானிடெரி நாப்கின்' : துணை சுகாதார மையத்தில் வினியோகம்
ADDED : செப் 29, 2011 09:39 PM
கிராமப்புற பெண்களுக்கு சுகாதாரம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், மாதவிடாய் காலத்தில் சரிவர சுத்தம் பேறுவதில்லை.
இதனால், இனப்பெருக்க உறுப்பில் தொற்று ஏற்பட்டு, மலட்டுத்தன்மை, கர்ப்பப் பை நோய்கள் வர நேரிடுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு, ஆறு 'சானிடெரி நாப்கின்'கள் கொண்ட ஒரு பாக்கெட்டை ஆண்டுக்கு 18 முறை, இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. முதல் கட்டமாக, ஒவ்வொரு கிராமப்புற அரசுப் பள்ளியிலும், பெண் ஆசிரியர் ஒருவர் பொறுப்பில், மாணவியரிடையே திட்டம் செயல்படுத்தப்படும்.
அடுத்த கட்டமாக, ஊரகப் பகுதிகளில் உள்ள துணை சுகாதார மையங்கள் மற்றும் ஊட்டச்சத்து மையங்கள் மூலம், 10 முதல் 19 வயது வரையான இளம் பெண்களுக்கும் சானிடெரி நாப்கின் வழங்கப்படும். இது தவிர, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்கள், சிறையில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும்.
சானிடெரி நாப்கின்களை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயார் செய்து, அதை பொது சுகாதாரத் துறை மூலம் வினியோகிக்க திட்டமிடப் பட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இதில் பயிற்சி அளித்து, அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய கால தாமதமாகும் என்பதால், தற்போதைக்கு தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்து கொள்ளப்படும். இதற்கான டெண்டர், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னர் அறிவிக்கப்படும்.
எவ்வளவு பேருக்கு, எப்படி? : 10 முதல் 19 வயது இளம் பெண்கள் - 40 லட்சம், அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்கள் - 7 லட்சம், சிறைகளில் கைதிகளாக உள்ள பெண்கள் - 700 பேர், ரேஷன் திட்டம் போல், ஒவ்வொரு பயனாளிக்கும் அட்டை வழங்கப்பட்டு, அதில் வழங்கல் விவரம் பதிவு செய்யப்படும்.