ADDED : ஜூலை 15, 2011 04:09 PM

சிவகங்கை: பிரசவத்தின் போது ரத்தபோக்கு காரணமாக, கர்ப்பிணிகள் இறப்பை தவிர்க்க, 'உயிர் காக்கும் ஆடை' திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆண்டிற்கு 12 லட்சம் பிரசவம் நடக்கிறது. இதில், ஒரு லட்சம் பிரசவம் நடந்தால், 97 கர்ப்பிணிகள் இறக்கின்றனர்.
துவக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய வசதியில்லாத நிலை இருந்ததால் பிரசவத்திற்கு செல்ல கிராம மக்கள் அஞ்சினர். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டிற்கு 60 ஆயிரம் பிரசவம் மட்டுமே நடந்தன. இதை தவிர்க்க, ஆரம்ப சுகாதார நிலையங்களை அரசு மேம்படுத்தியது. இதனால், மாநில அளவில் 1,450 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 லட்சம் பிரசவங்கள் வரை நடக்கிறது. இதில், ரத்த போக்கு காரணமாக 30 சதவீத கர்ப்பிணிகள் இறப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதிய திட்டம்: கர்ப்பிணிகளுக்கு ரத்த போக்கு ஏற்படுவதை தவிர்க்க, 'உயிர் காக்கும் ஆடை' திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறக்கும் போது, ரத்த போக்கு ஏற்பட்டால், அதை கட்டுப்படுத்த, கால், வயிறு, கர்ப்ப பைகளில் ரப்பரால் தயாரிக்கப்பட்ட இந்த ஆடை பொருத்தப்படும். இது ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். அதற்குள், ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளித்து, பிரசவம் பார்க்கப்படும். இதனால், இறப்பு தவிர்க்கப்படும்.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' ரத்த போக்கு காரணமாக கர்ப்பிணிகள் அதிகம் இறக்கின்றனர். ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசத்தில் இறப்பு அதிகம். இதற்காக மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வந்தது. மற்ற 3 மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் இது போன்ற இறப்பு குறைவு தான். இருப்பினும், நமது அரசு இத்திட்டத்தை மத்திய அரசிடம் கேட்டு பெற்று, 400 'உயிர் காக்கும் ஆடை'களை வாங்கியுள்ளது,'' என்றார்.

