பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்காக 3,600 உயர்நிலைப் பள்ளிகளில் "லேப்' வசதி
பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்காக 3,600 உயர்நிலைப் பள்ளிகளில் "லேப்' வசதி
ADDED : செப் 29, 2011 09:55 PM
பத்தாம் வகுப்பு மாணவர்களின் செய்முறைத் தேர்விற்கு வசதியாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 3,600 பள்ளிகளில், 'லேப்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும், தலா 50 ஆயிரம் ரூபாய்க்கு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு, இதுவரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நடந்ததில்லை. சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், முதன் முறையாக, அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும், ஜனவரி இறுதிக்குள் செய்முறைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் மணி, இணை இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் கூறியதாவது: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், செய்முறைத் தேர்வு செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மத்திய இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பள்ளிக்கும், தலா 50 ஆயிரம் ரூபாய் செலவில், செய்முறைத் தேர்வுக்கான உபகரணங்கள் வாங்கப்பட்டு, பள்ளிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
செய்முறைத் தேர்வுகள் அனைத்துமே, எளிதான உபகரணங்களைக் கொண்டு செய்யும் வகையில் தான், பாடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்தும் 'லேப்' அறைகளிலேயே, பத்தாம் வகுப்பு மாணவர்களும் செய்முறைத் தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
பொதுத் தேர்வு அட்டவணை : மெட்ரிகுலேஷன், ஒரியன்டல், ஆங்லோ-இந்தியன் பாடத் திட்டப் பள்ளிகளில், செய்முறைத் தேர்வுகள் வழக்கமாக, ஜனவரி கடைசி வாரத்தில் துவங்கி, பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை நடக்கும்.
இந்த ஆண்டு, அனைத்து பாடத் திட்டப் பள்ளிகளும், சமச்சீர் கல்வி கட்டமைப்புக்குள் உள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, சமச்சீர் கல்வித் திட்டப்படி, செய்முறை பொதுத் தேர்வு ஒரேயடியாக நடத்தப்படாமல், செப்டம்பர், அக்டோபரில் - நான்கு பாடங்கள், நவம்பரில் - நான்கு பாடங்கள், டிசம்பரில் - நான்கு பாடங்கள் மற்றும் ஜனவரியில் - நான்கு பாடங்கள் என, 16 தேர்வுகளாக நடைபெறும்.
முன்கூட்டியே செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க, அட்டவணை வெளியிடப்பட்டுள்ளால், பொதுத் தேர்வுகள் முன்கூட்டியே நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும், பொதுத் தேர்வுகள் வழக்கம் போலவே நடைபெறும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.