ADDED : ஜூலை 11, 2011 11:46 AM
திருவாரூர்: தி.மு.க., டவுன் பஞ்சாயத்து செயலர் பன்னீர் செல்வம் மீது போலீசார் பொய் வழக்குகள் பதிவு செய்வதாக கூறி அவரது குடும்பத்தினர் 4 பேர் விஷமருந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே கொல்லுமாங்குடியை சேர்ந்தவர் சாமிநாதன். அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், கருவங்குடியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் சாமிநாதனுக்கும் இடையே தகராறு நடந்தது. இதில் சாமிநாதனை செல்வம் படுகொலை செய்தார். இக்கொலை தொடர்பாக, செல்வம், தி.மு.க., டவுன் பஞ்சாயத்து செயலர் பன்னீர் செல்வம், அவரது மகன் காளீஸ்வரன், ராஜா, அப்பு, பிரகாஷ், பரதன் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இதில் பன்னீர் செல்வம் கடந்த சில மாதங்களுக்கு முன் சி.பி.எம்., விவசாய பிரிவு செயலர் நாவலன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பன்னீர் செல்வம் மீது போலீசார் பொய்வழக்கு போடுவதாக கூறி, அவரது மனைவி சுசீலா, மருமகள் லதா மற்றும் இருவர் விஷமருந்தினர். அவர்கள் தற்போது திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.