ADDED : செப் 28, 2011 03:53 PM

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தே.மு.தி.க., கூட்டணியில் இணைந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணியாக போட்டியிட்டன.
இந்நிலையில், உள்ளாட்சித்தேர்தலில் தே.மு.தி.க., தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. அத்துடன் 9 மாநகராட்சிகள் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க.,வுடன் பேசி வந்த மார்க்சிஸ்ட் கட்சியும் சீட் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அங்கிருந்து விலகி தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைத்து, கோவை மற்றும் வேலூர் மாநகராட்சிகளை பெற்றது.
இந்நிலையில், கடைசி வரையில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தே தீருவது என்ற குறிக்கோளுடன் 3 கட்ட பேச்சு வார்த்தை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் உடன்பாடு எட்டப்படாததால் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகுவது என்ற முடிவை எடுத்தது. இதையடுத்து இன்று காலை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., அலுவலகத்திற்குச் சென்ற தா.பாண்டியன் தலைமையிலான நால்வர் குழுவுடன் விஜயகாந்த் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடன்பாடு மட்டுமே: தே.மு.தி.க.,வுடனான தங்களது உறவு ஒரு தேர்தல் கூட்டணி உடன்பாடு மட்டுமே என தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.