ADDED : ஏப் 07, 2024 02:37 AM

நபிகள் நாயகம் ஒருமுறை தோழரிடம், 'எல்லா உயிர்களின் மீது அன்பு காட்டுங்கள்' என வலியுறுத்தினார்.தோழர், 'எப்படி அதை செய்வது' எனக் கேட்டார். அதற்கு ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தார் நாயகம்.
பெண் ஒருத்தி பூனை வளர்த்தாள். ஆனால் அதை கட்டிப்போட்டு, உணவும் தராமல் இருந்தாள். மறுமைநாளில் இவளுக்கு தண்டனை கிடைப்பது உறுதி. அதேசமயம் பாலைவனத்தில் பயணித்த ஒருவர் தாகமுடன் இருந்த நாய்க்கு தண்ணீர் கொடுத்தார். இந்த செயலால் அவர் சுவர்க்கத்தில் வாழும் பாக்கியத்தை பெற்றார்'' என்றார்.
அதுபோல் தினமும் இரண்டு வான துாதர்கள் பூமிக்கு வருகிறார்கள். இவர்களில் ஒருவர், ''இறைவா. நல்ல செயல்களை செய்யும் இவருக்கு நன்மையை வழங்கு'' என நல்லவருக்கு சிபாரிசு செய்வார். மற்றொருவர் தீயவர்களைக் கண்டு, ''இவர்களுக்கு அழிவைக் கொடு'' என்பார்.எனவே உயிர்கள் மீதும் அன்பு காட்டுங்கள். நல்ல செயல்களை விரைந்து செய்யுங்கள்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:40 மணி

