16 அம்ச பாதுகாப்பு விதிகள்; பள்ளி வாகனங்களில் ஆய்வு
16 அம்ச பாதுகாப்பு விதிகள்; பள்ளி வாகனங்களில் ஆய்வு
ADDED : ஏப் 30, 2024 04:51 AM

சென்னை : பள்ளி, கல்லுாரி வாகனங்களில், 16 அம்ச பாதுகாப்பு விதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இயக்கப்படும், 34,835 பள்ளி மற்றும் கல்லுாரி வானங்களின் பாதுகாப்பு குறித்து, ஆண்டுதோறும் மே மாதத்தில் சோதனை நடத்தப்படும்.
போக்குவரத்து துறை, கல்வித்துறை, போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்துவர். பாதுகாப்பு குறைபாடு உள்ள வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.
இதுகுறித்து, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளி, கல்லுாரி வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முன்கூட்டியே ஆய்வு நடத்துவது வழக்கம். பள்ளி, கல்லுாரிகளுக்கு நேரடியாக சென்றும், சில இடங்களில் வாகனங்களை வரவழைத்தும், முழுமையாக ஆய்வு நடத்தப்படும்.
குறிப்பாக வாகனங்களில் அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுனர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட, 16 அம்சங்கள் குறித்து, ஆய்வு நடத்தப்படும். வரும் கல்வி ஆண்டுக்கான ஆய்வு பணிகள், மே முதல் வாரத்தில் துவங்கி, ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்படும்.
இதற்கான, ஆய்வு அறிக்கையை போக்குவரத்து ஆணையரகத்திற்கு அனுப்ப உத்தவிடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரிகள் திறப்பதற்கு முன், இந்த ஆய்வு பணிகளை நிறைவு செய்ய உள்ளோம். வாகனங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், எப்.சி., எனப்படும் தகுதிச் சான்று அளிக்கப்பட மாட்டாது. பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், அனுமதி ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

