ADDED : ஆக 25, 2024 05:29 AM

மயிலாடுதுறை: குளத்தில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த காரைமேடு தோப்புத் தெரு பகுதியில் சுக்கான் குளம் உள்ளது. இந்த குளத்தில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் காரைமேடு, டி.மணல்மேடு பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் குளித்தனர்.
அப்போது டி.மணல்மேடு மெயின் ரோட்டை சேர்ந்த வெற்றி வீரன் மகன் மாவீரன்,9; பிரகாஷ் மகன் சக்தி,9; ஆகிய இருவரும் குளத்தில் இருந்த ஆலமரத்தில் ஏறி தண்ணீரில் குதித்து விளையாடினர். சற்று நேரத்தில் அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் மட்டும் கரையில் இருந்தது. இருவரையும் காணவில்லை. அதனை அறிந்த அவர்களது பெற்றோர் மற்றும் கிராம மக்கள் குளத்தில் இறங்கி தேடினர். சமீபத்தில் குளத்தில் மண் எடுக்கப்பட்டு ஆழம் அதிகமாக இருந்ததால் அவர்களால் தொடர்ந்து தேட முடியவில்லை.
தகவலறிந்து வந்த சீர்காழி தீயணைப்பு படையினர் குளத்தில் இறங்கி வெகு நேர தேடுதலுக்கு பின், இரு சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

