ADDED : ஜூலை 01, 2024 01:38 AM

சென்னை: ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன், 40; தொழிலதிபர் மற்றும் பங்குச் சந்தை, வர்த்தகர். இவர் நேற்று முன்தினம், தன் வீட்டிலுள்ள லாக்கரில் இருந்து செலவுக்காக பணம் எடுக்க சென்ற போது, வழக்கமாக வைக்கும் இடத்தில் சாவி இல்லை.
தேடிப் பார்த்தும் கிடைக்காததால், 'டெக்னீஷியன்' ஒருவரை அழைத்து, உடைத்து திறந்தார். அப்போது, அதிலிருந்த 250 சவரன் நகை, 10 கிலோ வெள்ளிப் பொருட்கள், 25,000 ரூபாய் என, 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த கோபாலகிருஷ்ணன், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், சரவணன் என்பவர் கடந்த, 10 ஆண்டுகளாக கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். அவரது நடத்தை சரியில்லாததால், கடந்த 27ம் தேதி வேலையை விட்டு அனுப்பினேன். தற்போது நகை, பணம் திருடப்பட்டுள்ளது.
ஓட்டுனரை பிடித்து விசாரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார். புகாரின்படி வழக்குப்பதிவு செய்த பட்டினப்பாக்கம் போலீசார், அசோக் நகரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் சரவணன், 35, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.