கார்கே குழுமத்துக்கு 5 ஏக்கர் அரசு நிலம் கர்நாடக அரசுக்கு கவர்னர் நோட்டீஸ்
கார்கே குழுமத்துக்கு 5 ஏக்கர் அரசு நிலம் கர்நாடக அரசுக்கு கவர்னர் நோட்டீஸ்
ADDED : செப் 03, 2024 02:03 AM

பெங்களூரு: 'காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குடும்பத்தினருக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு கர்நாடக அரசு, 5 ஏக்கர் நிலத்தை எந்த அடிப்படையில் வழங்கியது' என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மாநில தலைமை செயலருக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
காங்கிரஸ் தேசிய தலைவராக இருப்பவர், கர்நாடகாவின் கலபுரகியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே. இவரது தலைமையில், 'சித்தார்த்தா விஹாரா டிரஸ்ட்' செயல்பட்டு வருகிறது. இந்த குழுமத்தில், அவரது மனைவி, மகனும் மாநில அமைச்சருமான பிரியங்க் கார்கே, இளைய மகன் ராகுல் கார்கே, மருமகனும் கலபுரகி எம்.பி.,யுமான ராதாகிருஷ்ணா தொட்டமணி ஆகியோர் டிரஸ்டிகளாக உள்ளனர்.
இந்த அறக்கட்டளைக்கு, பெங்களூரு தேவனஹள்ளி அருகில் உள்ள வசந்தபுராவில் கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரியம் சார்பில், சமீபத்தில், 5 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த நிலம், கார்கே குழுமத்துக்கு, எஸ்.சி., கோட்டாவின் கீழ் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருக்கும் பிரியங்க் கார்கே, அதிகார துஷ்பிரயோகம் செய்து, தங்கள் டிரஸ்ட்டுக்கு இலவசமாக அரசு நிலத்தை ஒதுக்கியுள்ளதாகவும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும்படியும், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, ஆகஸ்ட் 27ல் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், 'எந்த அடிப்படையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு, இலவசமாக 5 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது' என்றும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படியும், மாநில தலைமை செயலர் ரஜ்னீஷ் கோயலுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது குறித்து, அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், ''நம் கவர்னருக்கு இரண்டு அரசியல் அமைப்பு உள்ளன. பா.ஜ., - ம.ஜ.த.,வுக்கு ஒரு அரசியல் அமைப்பு, காங்கிரசுக்கு ஒரு அரசியல் அமைப்பு உள்ளது. பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் அசோக் ஆகியோர் மீதும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் விஷயத்தில் ஏன் கவர்னர் விளக்கம் கேட்கவில்லை. நான் ஒரு தலித் என்பதால், எனக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வினர் சூழ்ச்சி செய்கின்றனர்,” என்றார்.
***