ராமேஸ்வரம் கடல் வழியாக சென்ற அகதிகள் 5 பேர் இலங்கையில் கைது
ராமேஸ்வரம் கடல் வழியாக சென்ற அகதிகள் 5 பேர் இலங்கையில் கைது
ADDED : ஜூன் 04, 2024 01:32 AM

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து முகாமில் தங்கியிருந்த 5 பேர் ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு சென்றபோது, அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கையில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து புதுக்கோட்டை, உளுந்துார்பேட்டை, கடலுார், விருதாச்சலம் ஆகிய முகாம்களில் தங்கியிருந்த, இலங்கை வவுனியா ஆச்சிபுரம் விக்னராஜ் துஷாந்தன் 37, தலைமன்னார் செலஸ்டின் சுரேஷ் குமார் 39, மன்னார் பகுதி ரெத்அப்சலான் 24, கினியா, இந்துபுரம் வீர்சிங்கம் சுஜிவன் 26, மன்னார், தலப்பாடு பகுதி சந்திரசேகரன் விஜித்குமார் 38, ஆகியோர் ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக நேற்று முன்தினம் அதிகாலையில் இலங்கைக்கு படகில் சென்றனர். அவர்கள் தலைமன்னார் ஊர்மனை கடற்கரைப்பகுதியில் இலங்கை கப்பல் படையினரால் கைது செய்யப்பட்டனர். குற்றப்பின்னணி எதுவும் உள்ளதா என விசாரிக்கின்றனர்.
5 பேரும் வேளாங்கண்ணி கடற்கரைப்பகுதியில் இருந்து வந்ததாக தெரிவித்தனர். சோதனையில் மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பயணித்த அரசு பஸ் டிக்கெட்டை பறிமுதல் செய்தனர்.
இதன் மூலம் ராமேஸ்வரம் கடற்கரைப்பகுதியில் இருந்து 5 பேரும் இலங்கை சென்றது உறுதியானது.
இவர்களிடம் தலைமன்னார் போலீசார் விசாரிக்கின்றனர். ராமேஸ்வரம் பகுதியில் இருந்து எப்படி சென்றனர் என அப்பகுதி கடற்படையினர், கியூ பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.