3 ஆண்டில் ரூ.9.99 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்; முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா கிளம்பினார்
3 ஆண்டில் ரூ.9.99 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்; முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா கிளம்பினார்
ADDED : ஆக 28, 2024 05:49 AM

சென்னை : ''தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில், தொழில் நிறுவனங்களுடன், 9.99 லட்சம் கோடி ரூபாய்க்கு, 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் வழியே, 18.79 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக,நேற்று இரவு 10:00 மணிக்கு, அமெரிக்கா புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
அரசு பயணமாக அமெரிக்கா செல்கிறேன். தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்த்ததும், செப்., 14ல் திரும்பி வருவேன். முதலீடுகளை ஈர்க்க, இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டு வருகிறேன்.
ஏற்கனவே, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளுக்கு சென்றதன் வழியே, தமிழகத்திற்கு பல்வேறு முதலீடுகள் வந்துள்ளன.
இந்த பயணங்களின் போது, 18,521 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், 10,852 கோடி
தொடர்ச்சி 3ம் பக்கம்
3 ஆண்டில்...
முதல் பக்கத் தொடர்ச்சி
ரூபாய் மதிப்பிலான, 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதில், 990 கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து திட்டங்களில் உற்பத்தி துவங்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட், 21ல் நடந்த, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிங்கப்பூரை சேர்ந்த, 'ஹைபீ' நிறுவன திட்டத்தையும், ஜப்பான் நாட்டின், 'ஓம்ரான்' நிறுவன திட்டத்தையும் துவக்கி வைத்தேன். இதன் வழியே, 1,538 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 3,796 கோடி ரூபாயிலான, மூன்று திட்டங்களின் கட்டுமான பணிகள் முன்னேற்ற நிலையில் உள்ளன.
இம்மாநாட்டில், ஜப்பானின் மிட்சுபா, சட்ராக் நிறுவனங்கள் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இது தவிர, 3,540 கோடி ரூபாயிலான மூன்று திட்டங்கள், பல்வேறு முன்னேற்ற நிலையில் உள்ளன; 438 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு விரிவாக்க பணிகள் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளன.
மேலும், 2,100 கோடி ரூபாயிலான நான்கு திட்டங்களில், சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும், துரிதமான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால், இதுபோன்ற பயணங்கள் மிக மிக முக்கியமானவை.
திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பின், மூன்று ஆண்டுகளில், 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றின் மொத்த மதிப்பு, 9 லட்சத்து 99,093 கோடி ரூபாய். இதன் வழியே, 18.79 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவற்றில், 234 திட்டங்கள் உற்பத்தியை துவக்கி உள்ளன. இதன் வழியே, 4.16 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. மற்ற ஒப்பந்தங்கள் படிப்படியாக செயல்பாட்டிற்கு வரும்.
கடந்த வெளிநாட்டு பயணங்களின் போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழியே, பல நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன. அதேபோல், தற்போது பயணம் வழியே மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை தொடர்ந்து கண்காணித்து செயல்பாட்டிற்கு கொண்டு வருவேன்.
தமிழகத்தை, 2030க்குள், ஒரு டிரில்லியன் டாலர்; அதாவது, 84 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை விரைவாக அடைவோம். இதற்காக உலகின் கவனத்தை தமிழகத்தை நோக்கி ஈர்க்க, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகருக்கு செல்கிறேன். ஒப்பந்தங்கள் விபரத்தை திரும்பி வரும் போது சொல்கிறேன். அமெரிக்க வாழ் தமிழர்களை சந்திக்க உள்ளேன். உங்கள் வாழ்த்துக்களுடன், இந்த பயணம் நிச்சயம் வெற்றிகரமாக அமையும். இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.