UPDATED : ஜூன் 10, 2024 10:13 AM
ADDED : ஜூன் 10, 2024 04:10 AM

கூடலுார்: கோவை வனக்கோட்டம், மருதமலை வனப்பகுதியில், மே 30ம் தேதி உடல்நலக் குறைவால், 40 வயது பெண் யானை, தன் நான்கு மாத குட்டியுடன் இருந்தது. அதற்கு, கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த யானையின், ஐந்து வயது ஆண்குட்டி இரவில், தாய் யானையின் அருகே காத்திருந்து அதிகாலையில் அங்கிருந்து சென்றது. அதனுடன், நான்கு மாத குட்டி யானையும் சென்றது. இரண்டு குட்டிகளும், ஒரு ஆண் யானையுடன் இருப்பது தெரிய வந்தது. அவற்றை தேடும் பணியில் வனத்துறையின் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நான்கு மாத குட்டியானை மருதமலை அருகே வனப்பகுதியில் தனியாக இருப்பதை அறிந்த வன ஊழியர்கள் நேற்று அதை மீட்டு, அதன் தாயிடம் சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டனர். எனினும், தாய்யானை அந்த குட்டியை சேர்க்கவில்லை.
தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு நேற்று காலை, 9:45 மணிக்கு குட்டியானை கொண்டு வரப்பட்டு, பராமரிப்புக்காக கராலில் விடப்பட்டது.
அதை பராமரிக்க, வாசு, விவேக் என இரண்டு தற்காலிக பாகன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குட்டி வருகையின் மூலம் முதுமலையின் யானைகளின் எண்ணிக்கை, 30 ஆக உயர்ந்துள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'குட்டி யானை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது. தற்போது கராலில் தனியாக வைத்து கண்காணிக்கிறோம்.
இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை திரவ உணவு வழங்கப்படுகிறது. இரண்டு பாகன்கள் உடனிருந்து கண்காணித்து வருகின்றனர்' என்றனர்.