துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்; அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு?
துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்; அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு?
ADDED : ஜூலை 02, 2024 12:38 AM

சென்னை : துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை வருந்தவில்லை என்றும், அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக துாத்துக்குடியில் நடந்த பேரணியின் போது, துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில், 13 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது; பின், வழக்கு விசாரணையை முடித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மனித உரிமை ஆர்வலரான ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. துாத்துக்குடி டி.எஸ்.பி., லிங்க திருமாறன் தரப்பில், 'மனித உரிமைகள் ஆணைய சட்டப்படி, ஏற்கனவே முடிக்கப்பட்ட வழக்கை, மீண்டும் விசாரிக்க முடியாது' என்று தெரிவிக்கப்பட்டது.
மனித உரிமைகள் ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவை மறுஆய்வு செய்ய முடியும் என்றும், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க தடையில்லை என்றும் ஹென்றி திபேன் தெரிவித்தார்.
சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும். அடிப்படை முகாந்திரம் இன்றி, இந்த மனுவை மனுதாரர் தாக்கல் செய்துஉள்ளார்' என்றார்.
அப்போது நீதிபதிகள், 'மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நடந்த சம்பவத்துக்கு, இதுவரை எந்த அதிகாரியும் வருந்தவில்லை. அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்.
'துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? அதற்கு யார் பொறுப்பேற்பர்' என்று கேள்வி எழுப்பினர். பின், விசாரணையை வரும் 15க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.