தனியார் பங்களாக்களில் கள்ளழகர் அனுமதியை ரத்து செய்ய வழக்கு
தனியார் பங்களாக்களில் கள்ளழகர் அனுமதியை ரத்து செய்ய வழக்கு
UPDATED : ஏப் 03, 2024 05:28 AM
ADDED : ஏப் 03, 2024 01:29 AM

மதுரை:மதுரை சித்திரைத் திருவிழாவின் போது, தனியார் பங்களாக்களில் கள்ளழகர் எழுந்தருள வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கை, நீதிமன்றம் பைசல் செய்தது.
மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவையொட்டி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது.
பாகுபாடு இன்றி மக்கள் பங்கேற்கின்றனர். இது, மத நல்லிணக்கத்தை நிலைநாட்டும் திருவிழா.
அழகர் கோவிலிலிருந்து மதுரை வண்டியூர் வரை, 25 கி.மீ., கள்ளழகர் பயணிக்கிறார். அவர் எழுந்தருளும் அரசு மற்றும் பாரம்பரிய மண்டகப் படிகளை தவிர்த்து, தனியார் அமைப்புகள், ஜாதி அமைப்புகள், தனிநபர் பங்களாக்களில் எழுந்தருள கோவில் நிர்வாகம் கட்டணம் வசூலிக்கிறது.
மண்டகப்படி அனுமதி வழங்குகிறது. இதன் மூலம் கோவில் நிர்வாகமே பாகுபாடுகளை உருவாக்குகிறது. இது சட்டப்படி ஏற்புடையதல்ல.
இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த மனுவை, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: கடந்த ஆண்டு திருவிழா மற்றும் தற்போதுவரை 483 மண்டகப்படிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில நிமிடங்கள் மட்டுமே சுவாமி எழுந்தருள்வார். தற்போது திருவிழாவையொட்டி, மேலும் சிலர் மண்டகப்படி அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர்.
பாரம்பரிய வழித்தடத்தில் கள்ளழகரை ஊர்வலமாக எடுத்து வந்து மண்டகப்படிகளில் எழுந்தருளச் செய்வர். வழித்தடத்தில் மாற்றம் இல்லை. இதுவரை எவ்வித புகாரும் இல்லை. மனுதாரர் எவ்வித ஆதாரமும் இன்றி, அச்ச உணர்வின் காரணமாக வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: இதுவரை எவ்வித புகாரும் இன்றி சித்திரைத் திருவிழா நல்ல முறையில் நடந்து வருகிறது. நீதிமன்றம் தலையிட்டு, எவ்வித உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை; வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

