'பப்'பில் தோழியருடன் நடனமாடிய கல்லுாரி மாணவர் மயங்கி விழுந்து பலி
'பப்'பில் தோழியருடன் நடனமாடிய கல்லுாரி மாணவர் மயங்கி விழுந்து பலி
ADDED : ஆக 19, 2024 03:57 AM

சென்னை: சென்னையில், 'பப்' ஒன்றில், தோழியருடன் நடனமாடிய, தனியார் கல்லுாரி மாணவர் மயங்கி விழுந்து பலியானார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் முகமது சுகைல், 22. இவர் சென்னை ராமாபுரத்தில் விடுதி ஒன்றில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன் தினம் இரவு, 9:00 மணியளவில், தோழியர் மூன்று பேருடன், நுங்கம்பாக்கத்தில் ஆர்.கே.ஈவென்ட்ஸ் என்ற பெயரில், ஹரீஷ் என்பவர் நடத்தி வரும், கிங்ஸ் பார்க் ேஹாட்டலில் உள்ள, 'பப்' என்ற மதுபான விடுதிக்கு சென்றுள்ளார்.
தோழியர் மது குடித்து போதையில் மிதந்ததாக கூறப்படுகிறது. அவர்களுடன் சேர்ந்து முகமது சுகைலும் நடனமாடி உள்ளார். இரவு, 10:30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, உயிருக்கு போராடிய முகமது சுகைல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'முதற்கட்ட விசாரணையில், மாணவர் மது குடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அவர் வேறு ஏதேனும் போதை பொருள் பயன்படுத்தினாரா என்பதும், மரணத்திற்கான காரணமும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்தான் தெரியவரும்' என்றனர்.
இதற்கிடையே, சம்பவம் நடந்த, 'பப்'பில், தி.நகர் துணை கமிஷனர் கூத்தலிங்கம், அங்குள்ள ஊழியர்களிடம் விசாரித்தார். 'சிசிடிவி' கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தார்.
அங்கு வேறு ஏதேனும் போதைப்பொருள் வினியோகம் செய்யப்பட்டதா, சட்ட விரோத செயல்கள் நடக்கிறதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரித்து வருகிறார்.

