டாக்டர் படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்! மருத்துவக்கல்வி இயக்குநரகம் கிடுக்கிப்பிடி
டாக்டர் படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்! மருத்துவக்கல்வி இயக்குநரகம் கிடுக்கிப்பிடி
UPDATED : செப் 18, 2024 07:24 AM
ADDED : செப் 18, 2024 05:35 AM

சென்னை: மருத்துவ படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
கவுன்சிலிங்
எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான முதல்சுற்று கவுன்சிலிங் முடிந்த போது 1423 காலி இடங்களும், பி.டி.எஸ்., படிப்பில் 1566 இடங்களும் காலியாக இருந்தது. அதன் பின்னர் 2ம் கட்ட கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டு கடந்த 14ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நேற்றுடன் முடிவடைய, தரவரிசைப்பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.
காலக்கெடு
இதைத்தொடர்ந்து, மாணவர்கள் வரும் 26ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சென்று சேர்ந்து கொள்ள வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கல்லூரியில் இருந்து அபராதம் இன்றி வெளியேறிவிடலாம்.
ரூ.10 லட்சம் அபராதம்
ஆனால் கால இடைவெளி முடிந்த பின்னர், படிப்பை பாதியில் கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம், வைப்புத் தொகை, கல்விக்கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
நடவடிக்கை
இது குறித்து அவர்கள் மேலும் கூறி உள்ளதாவது; மாணவர்கள் இடங்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் தெளிவாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டும். மாணவர்கள் படிப்பை கைவிட்டால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். கவுன்சிலிங் முடிந்த பின்னர், கல்லூரிகளில் ஏற்படும் காலி இடங்களை குறைக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.