5 நாளில் ஆயிரம் பேர்! அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 'அட்மிஷன்'
5 நாளில் ஆயிரம் பேர்! அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 'அட்மிஷன்'
ADDED : மார் 07, 2025 11:05 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில், 'அட்மிஷன்' துவங்கிய நிலையில், ஐந்து நாளில், 1,083 குழந்தைகள் ஒன்றாம் வகுப்பில் இணைந்துள்ளனர்.
வரும், 2025 - 26ம் கல்வியாண்டுக்கு, அரசு பள்ளிகளில் அட்மிஷன், கடந்த, 1ம் தேதி முதல் துவங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டது. அரசு பள்ளிகளில் அட்மிஷன் அதிகரிக்கும் நோக்குடன் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தரப்பில் இருந்து விரிவான அறிவுறுத்தல், வழிகாட்டி நெறிமுறைகள் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
திருப்பூர் கல்வி மாவட்டத்தில், 1ம் தேதி அட்மிஷன் துவங்கியவுடன், ஒன்றாம் வகுப்பில் அதிக மாணவர் இணைய துவங்கினர். நேற்று காலை நிலவரப்படி, முதல் வகுப்பில், 1,083 பேரும், மற்ற வகுப்புகளில், 711 பேரும் என மொத்தம், 1,794 பேர், ஐந்து நாட்களில் அரசு பள்ளிகளில் இணைந்துள்ளனர். மே மாதம் முடிந்து, ஜூனில் பள்ளி துவங்கும் முன்பாக அட்மிஷன் முந்தைய கல்வியாண்டை விட அதிகரிக்கும் என மாவட்ட தொடக்க கல்வித்துறை எதிர்பார்த்துள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) பழநி கூறுகையில், ''ஒவ்வொரு பள்ளியிலும் அட்மிஷனுக்கென தனி ஆசிரியருக்கு பொறுப்பு வழங்கி, கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் அட்மிஷன் பள்ளி வேலை நாட்களில் முழு நாளும் நடத்தப்பட்டு வருகிறது. மிகக்குறுகிய நாட்களில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
பாராட்டு கடிதம்
திருப்பூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில், ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் இணைந்துள்ளதை பாராட்டி, பள்ளி கல்வித்துறை இயக்குநர் நரேஷ், திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கல்வி) பழநிக்கு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், 'நடப்பு கல்வியாண்டு 2025 - 2026, அட்மிஷன் துவங்கிய, மார்ச், 1 முதல், 5ம் தேதிக்குள் அதிகளவில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்தி காட்டியமைக்கு, உங்களை பாராட்டி, பெருமை அடைகிறேன். வரும் நாட்களிலும் சிறப்பாக செயல்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வயது மாணவர்களின் அட்மிஷனை உறுதி செய்ய வேண்டும்,' என தெரிவித்துள்ளார்.