'தி.மு.க., ஆட்சியில் அரசு வரலாற்றில் இல்லாத அவலம்'
'தி.மு.க., ஆட்சியில் அரசு வரலாற்றில் இல்லாத அவலம்'
ADDED : ஜூன் 01, 2024 06:03 AM

சென்னை: 'தமிழக அரசு வரலாற்றில் இல்லாத வகையில், கைத்தறித் துறை பணியாளர்கள் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாவதாக, கண்ணீர் மல்க, மாநில மனித உரிமை ஆணையத்தின் கதவை தட்டியிருக்கும் அவலம், தி.மு.க., ஆட்சியில் நிகழ்ந்துள்ளது. அரசு ஊழியர்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்திருப்பது, இதுவே முதல் முறை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 'தற்போதுள்ள மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள், தி.மு.க.,வால் நியமிக்கப்பட்டவர்கள். இவர்களிடம் கைத்தறித் துறை பணியாளர்களுக்கு நியாயம் கிடைக்கும் எனத் தோன்றவில்லை.
தி.மு.க., அரசு, தேர்தல் சமயத்தில் அரசு ஊழியர்கள் தொடர்பாக அள்ளி வீசிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. எனவே, அரசு ஊழியர் சங்கங்களும், போக்குவரத்து ஊழியர் சங்கங்களும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
மேலும், அனைத்து துறைகளிலும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. முதல்வர் தனிப்பிரிவிலேயே 25க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, அனைத்து அரசு ஊழியர் சங்கங்களையும் அழைத்து பேசி, அவர்களின் குறைகளை உடனடியாக களைய வேண்டும். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.' என்றார்.