ADDED : ஆக 24, 2024 10:41 PM
சென்னை:''சென்னையில் நடக்க உள்ள, 'பார்முலா - 4' கார் பந்தயத்தை, முதல் நாள் காலை பொது மக்கள் இலவசமாக பார்க்க அனுமதிக்கப்படுவர்,'' என, அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
சென்னையில் வரும், 31 மற்றும் செப்., 1ம் தேதி, 'பார்முலா - 4' கார் பந்தயம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து, அமைச்சர் உதயநிதி, தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில், நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டம் முடிந்த பின், அமைச்சர் உதயநிதி கூறியதாவது:
கார் பந்தயத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இப்பந்தயத்தை, 8,000 பேர் நேரில் அமர்ந்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வரும் 31ம் தேதி காலை பொது மக்கள் இலவசமாக பந்தயத்தை பார்க்கலாம்.
மதியத்திற்குப் பின், தகுதி சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இரவு 10:30 மணி வரை, போட்டிகள் நடக்கும். போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாமல், போட்டிகளை நடத்த, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.