காவிரி - குண்டாறு இணைப்பு பணி விரைவுபடுத்த அ.தி.மு.க., வலியுறுத்தல்
காவிரி - குண்டாறு இணைப்பு பணி விரைவுபடுத்த அ.தி.மு.க., வலியுறுத்தல்
ADDED : ஆக 19, 2024 04:12 AM

சென்னை: 'காவிரி - குண்டாறு இணைப்பு திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின், 60 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை அறிவித்தார்.
அவரது மறைவுக்கு பின், 2019ம் ஆண்டில், 1,652 கோடி ரூபாய் மாநில நிதியின் கீழ், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தேன்.
திட்டத்தின்படி, பவானி ஆற்றின் உபரி நீரான, 1.5 டி.எம்.சி., தண்ணீரை, காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தில் இருந்து நீரேற்று முறையில், குழாய்கள் வழியே, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள, 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், 971 குட்டைகளை நிரப்புவதால், 24,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
கடந்த 2021ல் எங்கள் ஆட்சி முடிவில், 90 சதவீத பணிகள் முடிந்திருந்தன. மீதமுள்ள 10 சதவீதப் பணிகள், ஆறு மாதங்களில் முடியும் நிலையில் இருந்தன.
அ.தி.மு.க., ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, இத்திட்டத்தை தி.மு.க., அரசு கிடப்பில் போட்டது.
நான் பலமுறை சட்டசபையிலும், பேட்டி, அறிக்கைகள் வழியாக வலியுறுத்தியும், மூன்று ஆண்டுகள் கழித்து, 250 கோடி ரூபாய் கூடுதல் செலவில், மீதமிருந்த 10 சதவீத பணிகளை முடித்து, முதல்வர் திறந்துள்ளார்.
இதை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னரே முடித்து திறத்திருந்தால், மூன்று மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் மற்றும் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்.
இதுபோல், சேலம் தலைவாசலில், அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட, ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா பணிகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன் முடிந்த நிலையில், இதை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்.
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டப் பணிகளை, தி.மு.க., அரசு விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

