6 சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் பொள்ளாச்சியில் அ.தி.மு.க., சறுக்கல்
6 சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் பொள்ளாச்சியில் அ.தி.மு.க., சறுக்கல்
ADDED : ஜூன் 05, 2024 01:51 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க.,வினர் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களாக இருந்தும், அக்கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்ததால், தொண்டர்கள் 'அப்செட்' ஆகினர்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார் என, அக்கட்சி தலைமை அறிவித்தது.
'குஷி'யான கட்சித் தொண்டர்கள், ஆறு சட்டசபை தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்துார் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களும் களம் இறங்கினர். ஆனால், நேற்று ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே, ஒவ்வொரு சுற்றிலும் கார்த்திகேயன் பின்னடைவை சந்தித்தார்.
இது, ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இருந்த அ.தி.மு.க., முகவர்களை சோர்வடையச் செய்தது. முடிவில், கார்த்திகேயன் 2,79,966 ஓட்டுகள் பெற்று, 2,50,162 ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., ஈஸ்வரசாமியிடம் தோல்வியை தழுவினார்.
இதனால், அ.தி.மு.க.,வினர் அங்கிருந்து சோகத்துடன் வெளியேறினர். கடந்த 2021 சட்டசபை தேர்தல் பொள்ளாச்சி லோக்சபாவுக்கு உட்பட்ட ஆறு சட்டசபை தொகுதியிலும் அ.தி.மு.க., வென்றது.
ஆனால், இந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடனான கூட்டணி வியூகத்தில், அ.தி.மு.க., சொதப்பல் காரணமாகவே, தற்போது தோல்வியை தழுவியுள்ளது என, அ.தி.மு.க.,வினர் 'அப்செட்' ஆகியுள்ளனர்.