புதிய சட்டங்களை திரும்ப பெற நடவடிக்கை எடுங்கள் முதல்வரிடம் வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்
புதிய சட்டங்களை திரும்ப பெற நடவடிக்கை எடுங்கள் முதல்வரிடம் வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 05, 2024 01:30 AM

சென்னை:வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, 'மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்' என்று, வலியுறுத்தினர்.
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் மற்றும் நிர்வாகிகள்.
நாமக்கல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் அய்யாவு மற்றும் பல்வேறு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர்கள், எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் தலைமையில், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.
வேண்டுகோள்
அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
புதிய சட்டங் களை ரத்து செய்ய, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
சந்திப்புக்கு பின், வழக்கறிஞர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் கூறியதாவது:
மூன்று சட்டங்களை திரும்பப் பெற, பார்லிமென் டில் தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினோம். எம்.பி.,க்களை கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
அத்துடன், முப்பெரும் சட்டங்களை வாபஸ் பெற வைக்க தேவையான நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுக்கும் என்றும் உறுதி அளித்தார்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, கூட்டமைப்பு சார்பில் கடந்த வாரம் போராட்டத்தை துவக்கினோம்.
ஏற்க முடியாது
சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தோம். இன்று கூட்டமைப்பு சார்பில், மாவட்ட நீதிமன்ற வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும், நாளை நீதிமன்றத்தை புறக்கணிக்கவும் முடிவு செய்து உள்ளோம். இது, மக்களுக்கு எதிரான சட்டம்; வழக்கறிஞர் சமுதாயத்திற்கும் எதிரானது.
வழக்கறிஞர் ஒருவர் வழக்காடிக்கு ஆலோசனை கூறினால், அவரும் தண்டனைக்கு உரியவராகிறார். இதை வழக்கறிஞர்கள் ஏற்க முடியாது. இதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
சட்டத்தின் பெயர் சமஸ்கிருதத்தில் உள்ளது. சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாம். முழுமையாக மாற்றக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுக்கு எதிரானது
கடந்த 100 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த சட்டங்களை மாற்றி அமைத்துள்ளனர். குற்றம் செய்தவருக்கு ஆலோசனை வழங்கினால், அவருக்கு விதி, 113ன் கீழ் ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என்பது, வழக்கறிஞர்களுக்கு எதிரானது. இது, வழக்கறிஞர்கள் மற்றும் பொது மக்களுக்கு எதிரான சட்டம்.
- பிரபாகரன்
தலைவர், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம்
குளறுபடிகள் உள்ளன
மூன்று சட்டங்களை அவசரமாக கொண்டு வந்துள்ளனர். இச்சட்டங்களால், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், போலீசார், பொதுமக்கள், வங்கியாளர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவர். லோக்சபா, ராஜ்யசபாவில் சட்டத்தை அறிமுகப்படுத்திய போது, பாதி எம்.பி.,க்களை வெளியேற்றி நிறைவேற்றி விட்டனர். இச்சட்டங்களில் நிறைய குளறுபடிகள் உள்ளன. சட்டங்களின் பெயர், உச்சரிக்க முடியாத மொழியில் உள்ளது.
- வில்சன், தி.மு.க., - எம்.பி.,