ADDED : ஏப் 28, 2024 01:21 AM

சென்னை: 'பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை, எந்த மாணவரையும் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, தேக்க நிலையில் வைக்கக் கூடாது; அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நடப்பு கல்வியாண்டில், 6, 7, 8, 9ம் வகுப்புகளுக்கு, தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பாக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி, ஆங்கிலோ - இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் சிறப்பு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உரிய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையின்படி, ஒருங்கிணைந்த பதிவேட்டில், மூன்றாம் பருவத்திற்குரிய மதிப்பெண்கள் மற்றும், 'கிரேடு'களை பதிவு செய்ய வேண்டும். எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்.
மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக, கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துக்கு குறையாமல், ஒன்பதாம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள்படி முடிவு செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும்.
அனைத்து பள்ளிகளும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 6 ,7, 8ம் வகுப்புகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

