UPDATED : ஏப் 19, 2024 10:26 AM
ADDED : ஏப் 19, 2024 07:22 AM

சேலம்: அனைவரும் தவறாமல் ஓட்டளியுங்கள் என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார். ஓட்டளித்த பின், மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், பா.மக.நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் ஓட்டுச்சாவடியில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஓட்டளித்தார். அவருடன் குடும்பத்தினரும் வந்து ஓட்டளித்தனர்.
ஜனநாயக கடமை
பின்னர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: புதிய தலைமுறை வாக்காளர்களும், இளையோரும் தவறாமல் ஓட்டுச்சாவடிக்குச் சென்று ஓட்டளிக்க வேண்டும். அனைவரும் தவறாமல் ஓட்டளித்து, ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஜனநாயக கடமை ஆற்றிய எல்.முருகன்
சென்னை கோயம்பேடு ஓட்டுச்சாவடியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஓட்டளித்தார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில், ‛‛ 2047ம் ஆண்டு இந்தியா வல்லரசு நாடாக மாற வேண்டும். இதற்கு அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்'' என தெரிவித்தார்.
நிச்சயம் மாற்றம் வரும்
திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளி ஓட்டுச்சாவடியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஓட்டளித்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கூட்டணி அனைத்து தொகுதியிலும் வெல்லும். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும்.
நாடு செழிக்க வேண்டும். நல்ல மழை பெய்ய வேண்டும். அகில இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் பிரதமர் மோடி மேலும் நல்ல மாற்றங்களை கொண்டு வருவார். இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி வாய்ப்பு பிரகாசம்
தேனி பெரியகுளத்தில் ஓட்டளித்த பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த தேர்தல் முடிவில் அதிமுக எங்கள் வசம் வரும். 2026ல் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம். 3வது முறையாக மோடி பிரதமர் ஆகுவார். இவ்வாறு அவர் கூறினார்.

