அண்ணா பல்கலை 44வது பட்டமளிப்பு விழா கவர்னர் பங்கேற்பு; அமைச்சர் புறக்கணிப்பு
அண்ணா பல்கலை 44வது பட்டமளிப்பு விழா கவர்னர் பங்கேற்பு; அமைச்சர் புறக்கணிப்பு
ADDED : ஜூலை 03, 2024 01:54 AM

சென்னை,:அண்ணா பல்கலையின், 44வது பட்டமளிப்பு விழாவில், 1.15 லட்சம் பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கவர்னர் ரவி பட்டங்களை வழங்கினார். உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியும், துறை செயலரும் விழாவை புறக்கணித்தனர்.
அண்ணா பல்கலையின், 44வது பட்டமளிப்பு விழா, சென்னையில் பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. பல்கலை வேந்தர் கவர்னர் ரவி விழாவுக்கு தலைமையேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அனுமதி அளித்தார்
இவ்விழாவில், 932 பிஎச்.டி., பட்டதாரிகள், 66 முதல் தர மாணவர்கள், நேரில் பட்டம் பெற்றனர். மேலும், 1.14 லட்சம் பேருக்கு கல்லுாரிகள் வழியே, பட்டங்கள் வழங்க கவர்னர் அனுமதி அளித்தார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர், டி.ஜி.சீதாராம் பேசியதாவது:
அண்ணா பல்கலை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சிறந்த தரவரிசையையும், முன்னிலை இடத்தையும் பெற்றுள்ளது. இங்குள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் ஆண்டுதோறும், 26.5 கோடி பேர் பள்ளிப்படிப்பை நிறைவு செய்கின்றனர். ஆனாலும், உயர்கல்வியில், 4.3 கோடி பேர், அதாவது, 28.3 சதவீதம் பேர் தான் சேருகின்றனர்.
அதை, 2035க்குள், 50 சதவீதமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், வளர்ந்த நாடுகளில், 80 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேருகின்றனர்.
தமிழகம், 2021 - 22லேயே, 47 சதவீதம் உயர்கல்வி சேர்க்கையை பெற்றது. கடந்த ஆண்டில், 50 சதவீதத்தை எட்டி விட்டது. இந்த இலக்கை அடைந்துள்ள தமிழகத்துக்கு பாராட்டுக்கள். டிஜிட்டல் தொழில்நுட்ப கல்வி வேகமாக முன்னேறுகிறது.
ஏ.ஐ., என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எல்லா துறையிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. அதற்கேற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து மாணவர்களுக்கும், தொழில்நுட்ப கல்வி கிடைப்பதற்காக, இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமா படிப்பு புத்தகங்களை, 13 மொழிகளில் மொழி பெயர்த்து வருகிறோம்.
தமிழிலும், இன்ஜினியரிங் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த புத்தகங்களையும், இலவச சாப்ட்வேர்களையும், ஏ.ஐ.சி.டி.இ., இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பங்கேற்கவில்லை
விழாவில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்பார் என்று, அறிவிக்கப்பட்டிருந்தது. வேறு அலுவல் காரணங்களால், அவரால் பங்கேற்க முடியவில்லை என, துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்தார். உயர்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவும் விழாவில் பங்கேற்கவில்லை.
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனுக்கு, பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவர்னரின் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்கவில்லை என, கூறப்படுகிறது. விழாவில், அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் உட்பட, முன்னாள் துணைவேந்தர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.