ஆரணி வேளாண் பதப்படுத்தும் நிலைய சீரமைப்பு பணி துவக்கம்
ஆரணி வேளாண் பதப்படுத்தும் நிலைய சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : ஜூலை 16, 2024 01:26 AM

சென்னை: வேளாண் வணிகப்பிரிவினர் கட்டிய, ஆரணி முதன்மை பதப்படுத்தும் நிலையம், 'தினமலர்' நாளிதழ் செய்தியால் புனரமைக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில், காய்கறிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முதன்மை பதப்படுத்தும் நிலையம், ஓராண்டுக்கு முன் கட்டப்பட்டது.
தனியாரிடம் மாதம், 80,000 ரூபாய் வாடகைக்கு, இந்த நிலையம் ஒப்படைக்கப்பட்டது.
அதை, ஒப்பந்த நிறுவனம் பயன்படுத்தாததால், சமூக விரோதி களின் கூடாரமாக மாறியது. மது அருந்துதல், சூதாட்டம் உள்ளிட்டவை நடந்து வந்தன. அங்கிருந்த விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்கள் திருடப்பட்டன. இதுகுறித்து, ஆரணி போலீசில் புகார் அளித்தும் பலனில்லை.
இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் சமீபத்தில் வெளியானது. இதன் எதிரொலியாக, முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை சீரமைத்து, தனியாரிடம் ஒப்படைக்கும் பணிகளை, வேளாண் வணிகப் பிரிவினர் துவக்கி உள்ளனர்.

