முறைகேடுகளுக்கு உடன்படுவோரை கமிஷனர்களாக நியமிக்க முயற்சி: பா.ம.க.,
முறைகேடுகளுக்கு உடன்படுவோரை கமிஷனர்களாக நியமிக்க முயற்சி: பா.ம.க.,
ADDED : மார் 10, 2025 06:22 AM

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
சேலம் மாநகராட்சி கமிஷனராக, ஐ.ஏ.எஸ்., அல்லாத அதிகாரியான இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் விதிமீறல் நடந்துள்ளது. ஆட்சியாளர்களின் விருப்பங்களை, எதிர்கேள்வி எழுப்பாமல் நிறைவேற்றுபவர் என்பதால், அவர் நியமிக்கப்பட்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளின் நிர்வாகத்தை, மேம்படுத்துவதற்கு பதிலாக, முறைகேடுகளின் களமாக மாற்ற, தமிழக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.
சேலத்தை போலவே, மிக முக்கிய மாநகராட்சிகளின் கமிஷனர்களாக, ஐ.ஏ.எஸ்., அல்லாத அதிகாரிகள், சமீப காலமாக நியமிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல், வரி வருவாய் ஈட்டும் மாநகராட்சிகளில் ஒன்றான, ஓசூர் மாநகராட்சி கமிஷனராக இருந்த ஸ்ரீகாந்த், கடந்த ஜனவரியில் ஈரோடு மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார்.
அதன்பின் அவர் மயிலாடுதுறை கலெக்டராக நியமிக்கப்பட்டார். தற்போது ஓசூர், ஈரோடு மாநகராட்சி கமிஷனர்களாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அல்லாதவரை நியமிக்க, முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள காரணங்கள், தமிழக நலனுக்கு நன்மை சேர்ப்பதாக இல்லை.
இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், முறைகேடுகளுக்கும், விதி மீறல்களுக்கும் உடன்பட மாட்டார்கள் என்பதால், ஐ.ஏ.எஸ்., அல்லாத அதிகாரிகளை நியமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, நேர்மையான அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை, சேலம் கமிஷனர் இளங்கோவன் நியமனத்தில், தமிழக அரசு காட்டிய வேகமும், விதி மீறல்களும் உறுதி செய்கின்றன.
நேர்மையான அதிகாரிகளுக்கு, தண்டனை பதவியும், முறைகேடுகளுக்கு ஒத்துழைக்கும் அதிகாரிகளுக்கு, செல்வாக்குள்ள பதவிகளும் வழங்கப்படுவது, நல்லாட்சியின் அடையாளம் அல்ல. தமிழகத்தில் உள்ள, 25 மாநகராட்சிகளில், 13ல் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கமிஷனர்களாக உள்ளனர். அனைத்து மாநகராட்சி கமிஷனர் பணியிடங்களுக்கும், நேர்மையான இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் நியமனத்தை, உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.