'கொல்லைப்புற வழியாக அரசு பணி வழங்க நடத்தப்படும் ஆள் தேர்வு நாடகம்'
'கொல்லைப்புற வழியாக அரசு பணி வழங்க நடத்தப்படும் ஆள் தேர்வு நாடகம்'
ADDED : ஆக 29, 2024 07:56 PM
சென்னை:'இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல், போதையில்லா தமிழக இயக்கத்திற்கு வல்லுனர்கள் நியமிக்கும் அறிவிக்கையை, தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
உள்துறை மற்றும் மதுவிலக்கு அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள போதையில்லா தமிழ்நாடு இயக்கத்துக்கு, ஊடகம், திறன் பயிற்சி, தரவு பகுப்பாய்வுக்கு, 3 வல்லுனர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை; வயது வரம்பு இல்லை; எந்த அடிப்படையில், வல்லுனர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற எந்த விபரமும் அறிவிப்பில் இடம் பெறவில்லை.
மாதம் 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் தரப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அரசின் துணைச்செயலர் நிலையிலான பணிக்கான சம்பளம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியிடத்தை, இட ஒதுக்கீடு இல்லாமல், போட்டி தேர்வு இன்றி, நிரப்புவதை ஏற்க முடியாது.
ஆட்சியாளர்களின் வேண்டியவர்களுக்கு, கொல்லைப்புற வழியாக அரசு பணி வழங்கவே, இந்த ஆள் தேர்வு நாடகம் அரங்கேற்றப்படுவதாக சந்தேகிக்க தோன்றுகிறது. இது, எந்த வகையில் நியாயம். இந்த சமூக அநீதியை முதல்வர் ஆதரிக்கிறாரா அல்லது தமக்கு தெரியாமல் நிகழ்ந்து விட்டது என, தட்டிக்கழிக்கப் போகிறாரா?
இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல், போதையில்லா தமிழ்நாடு இயக்கத்திற்கு வல்லுனர்கள் நியமப்பதற்கான அறிவிக்கையை, தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

