ADDED : ஜூலை 26, 2024 08:27 PM
மதுரை:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில் ஒரு கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலாவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் அனுமதித்தது. ஸ்ரீவில்லிபுத்துார் ராமர், 60, கட்டட தொழிலாளி. இவர் அதே பகுதி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு மே 21ல் சென்றார். அங்கு சிங்கம் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராமரை சிலர் தாக்கினர்.
காயமடைந்த அவர் இறந்தார். சிலர் மீது ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த சத்திய ஷீலாவை போலீசார் கைது செய்தனர்.
இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.புகழேந்தி: ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

