ADDED : மே 13, 2024 02:54 AM
சென்னை : ''சிறந்த செவிலியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பின் விருதுகள் வழங்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், செவிலியர்களின் 90 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஒப்பந்த செவிலியர்கள் 1,412 பேர் நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர்.
தீர்வு
மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக பணிக்கு வந்தவர்களும், நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். செவிலியர்களின் பணியிட மாற்ற குளறுபடிக்கு தீர்வு காணப்பட்டுஉள்ளது.
கடந்த மூன்று ஆண்டு களில், 9,535 செவிலியர்கள் கலந்தாய்வு வாயிலாக, விரும்பிய இடங்களுக்கு சென்றுஉள்ளனர். கிராம சுகாதார செவிலியர்கள் 2,400 பேரை நியமனம் செய்யும் பணி, மூன்று மாதங்களுக்கு முன் துவங்கிவிட்டது.
தேர்வு
செவிலியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சிறந்த செவிலியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
தற்போது, 19 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பின், விருதுகள் வழங்கப்படும்.
இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.
- மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்