கேரளா, ஆந்திராவில் பறவை காய்ச்சல்: 'ஷவர்மா' சாப்பிடுவோர் உஷார்!
கேரளா, ஆந்திராவில் பறவை காய்ச்சல்: 'ஷவர்மா' சாப்பிடுவோர் உஷார்!
ADDED : மே 10, 2024 04:34 AM

சென்னை : கேரளா, ஆந்திராவில் பறவைக் காய்ச்ல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 'சிக்கன் ஷவர்மா' உணவு வகையை முழுமையாக வேக வைப்பதுடன், 'ஷிகெல்லா' போன்ற பாக்டீரியா இல்லாமல் முறையாக பராமரிக்க வேண்டும் என, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது.
கேரளா, ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே, எல்லை மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.
உயிரிழப்பு
இதுவரை தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என, மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. அதேநேரம், சிக்கன் ஷவர்மாவால் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, உணவகங்களை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடைக் காலத்தில் திடீரென பெய்த மழையால், தட்பவெப்ப மாற்றத்தால் ஷவர்மா உணவில், 'ஷிகெல்லா, சால்மோனெல்லா' பாக்டீரியாக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம்.
இந்த வகை பாக்டீரியாக்கள் இருக்கும் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, சிக்கன் ஷவர்மா செய்வதற்கான வழிகாட்டுதல்களை முறையாக அனைத்து உணவகங்களும் பின்பற்ற வேண்டும்.
இறைச்சியின் அனைத்து பகுதிகளையும், முறையாக வேக வைத்திருக்க வேண்டும். அதேபோல, அவ்வப்போது புதிதாக தான், மயோனைஸ் தயாரிக்க வேண்டும். பல மணி நேரம் தயாரித்து வைக்கப்பட்டிருந்த மயோனைஸ் பயன்படுத்தக்கூடாது.
பதப்படுத்துங்க
தற்போது, அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பதால், தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே, இறந்த கோழியை இறைச்சிக்காக பயன்படுத்தக்கூடாது.
இறைச்சியை முறையாக பதப்படுத்த வேண்டும். எந்த வகை உணவாக இருந்தாலும் முழுமையாக இறைச்சியை வேக வைக்க வேண்டும் என, அனைத்து உணவகங்களுக்கும், அந்தந்த மாவட்ட அதிகாரிகள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.