ADDED : மார் 23, 2024 01:43 AM

சென்னை:மத்திய சென்னை பா.ஜ., வேட்பாளரான வினோஜ் பி செல்வத்தின்,தேர்தல் பணிமனை அலுவலகத்தை,ரசைவாக்கத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார்.
பின்னர், அவர் பேசியதாவது:
நாட்டில், 10 ஆண்டுகளில், பெரும் மாற்றங்களை கொண்டு வந்த பிரதமர் மோடி, தமிழக மக்கள் மீது பெரும் அன்பு வைத்துள்ளார். லோக்சபா தேர்தலில் நிச்சயம் பா.ஜ., கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தை, 50 ஆண்டுகளாக தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சி செய்கின்றன. இவர்களுக்கு மாற்றான ஒரு ஆட்சியை கொண்டு வர மக்கள் நினைப்பது பா.ஜ.,வை மட்டுமே.
ஊழலற்ற தெளிவான, நேர்மையான ஆட்சியை பா.ஜ.,வால் மட்டுமே தர முடியும். இத்தேர்தலில், தமிழகத்தில் அதிக தொகுதிகளில் மக்கள், பா.ஜ.,வை வெற்றி பெற வைத்து, புதிய வரலாறு படைப்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், வேப்பேரியில் நடந்த, 'தச்சின் பாரத்' நிகழ்ச்சியில் பேசிய போது, ''கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், நாடு சீர்கேடு மற்றும் ஊழல்களில் மலிந்திருந்தது. தற்போது நாடு, 8.4 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளது.
''உலகளவில், 200 நாடுகள், 'டிஜிட்டல்' முறையில் பண பரிவர்த்தனை செய்கின்றன; அதில், 46 சதவீத பரிவர்த்தனை நம் நாட்டில் நடக்கிறது. 'டிஜிட்டல்' பரிவர்த்தனையில், இந்தியாவே முதலிடத்தில் உள்ளது,'' என்றார்.

